Tuesday, May 31, 2011

passwords security


எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.  ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும்   பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்
படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.  பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக  பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். 
மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து  அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                           எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?  

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள்
:
சிறிய எழுத்துக்கள்         (Lower Case)         : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன்      (Upper Case)          : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols)   : 18 நாட்கள்
 

7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்              (Lower Case)         :   4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன்           (Upper Case)          : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)    : 18 நாட்கள்
 

8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்             (Lower Case)         : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன்          (Upper Case)          : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன்  (Num & Symbols)  : 463 வருடங்கள்
 

9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்             (Lower Case)         : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன்          (Upper Case)          : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)   : 44,530 வருடங்கள்

kannalea kathal kavithai sankar

Sunday, May 29, 2011

தமிழ் அகராதி

வலைப்பூ திரட்டிகள்

சூரிய ஒளி மின் உற்பத்தி: தேவை தமிழகத்துக்குத் தனிக்கொள்கை


சூரிய ஒளி மின் உற்பத்தி: தேவை தமிழகத்துக்குத் தனிக்கொள்கை:
ஒளிமயமான தமிழகம் ..... மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசின் நடவடிக்கை எப்படி போகும்?..
[பதவியேற்ற 10 நாட்களுக்குள் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் வரவேற்க தக்க ஒன்று. சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து பரிசீலித்து வரும் தமிழக அரசு இதற்காக தனிக் கொள்கையை வகுக்கும் நேரம் வந்து விட்டது.


சூரிய ஒளி மின் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் என்பதால், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பஞ்சாயத்து அளவிலும் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த முடியும். அனல், அணு, நீர், காற்றாலை என்று எந்த மின் திட்டமானாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் மின் உற்பத்தி செய்ய முடியும். மின் தேவையோ பரவலாக இருக்கிறது. மின் வினியோகத்தின் போது, தற்போது ஏற்படும் 19 சதவீத மின் இழப்பை தவிர்க்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள துணை மின் நிலையங்களை மேம்படுத்தாமல், பயன்படுத்தி கொள்ளவும் சூரிய ஒளி மின் திட்டங்கள் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்தும் 3-5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தனியார் முதலீட்டுடன் 25 ஏக்கர் நிலம் போதும். ஒரு மெகா வாட்டிற்கு சுமார் 13 முதல் 14 கோடி வரை முதலீடு தேவைப்படும். இது வேறு எந்த திட்டத்திலும் இயலாத காரியம் சூரிய ஒளிமின் திட்டம். ஒரு ஆண்டுக்குள் நிறுவ முடியும். மழைநீர் சேமிப்புத் திட்டத்தை கண்டிப்புடன் அமல் செய்து மக்களிடம் நற்பெயர் வாங்கிய முதல்வர் ஜெயலலிதாவால் தான் இதுபோன்ற சூரிய ஒளி மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். மின் உற்பத்தியை மின் தொகுப்புக்கு (கிரிட்) அனுப்பும் இத்திட்டம் தவிர, மின் தொகுப்புக்கு அனுப்பாமல் நான் கிரிட் முறையும் உள்ளது. (ரூப் டாப் மாடல்) ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் படி தமிழகத்தில் உள்ள சுமார் 5000 வீடுகளில் 2 முதல் 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 100 சதுர அடி இடம் இருந்தால் போதும். ஒரு கி.வா. மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ. 2 லட்சம் செலவாகும். 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய மொத்தம் ரூ. 6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு மரபுசாரா மின் உற்பத்தி கழகம் (TEDA) 30 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. ஆகவே முதலீட்டாளருக்கு ரூ.4.20 லட்சம் செலவாகும். மீதமுள்ள தொகையில் 5 சதவீதம் வட்டியுடன் தமிழ்நாடு பவர் பினான்சியல் கார்ப்பரேஷன் கடன் வழங்கினால் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரிக்கும்.
முதலீட்டை ஈடு கட்ட: சூரிய ஒளியில் முதலீடு செய்யும் தனி நிறுவனத்துக்கோ, வீட்டுக்கோ, அமைப்புக்கோ அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு சரிபங்காக, அவர்கள் அரசுக்கு செலுத்தும் பலவித வரிகளில் உதாரணமாக சொத்து வரி, கார்ப்பரேஷன் வரி, தொழில் வரி, விற்பனை வரி, வாட் வரி ஆகியவற்றில் 6 ஆண்டில் தாங்கள் செய்த முதலீட்டை ஈடுகட்ட செய்யும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தால் இதில் முதலீடு செய்ய பலர் முன்வருவார்கள். 6 ஆண்டுகளுக்கு பின் மீதமுள்ள 19 ஆண்டுகளில் (சூரிய ஒளி மின் சாதனங்கள் 25 ஆண்டுகள் உற்பத்தி தரும்). 3 கி.வா. மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்ற நிலை உருவானால் இதில் முதலீடு செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள். அரசுக்கு இந்த முதலீட்டை சலுகை என்று நினைக்காமல் அரசுக்கு பதில் முதலீட்டை தனியார் செய்தார்கள் என்று எண்ணி, 6 ஆண்டுகளில் பணத்தை திருப்பி செலுத்துகிறோம் என்று கருத வேண்டும். பல வெளிநாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. மாநிலத்தின் பத்து வெவ்வேறு இடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்களை (சோலார் பார்க்) அமைக்க மாநில அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் 300 மெ.வா. மின் உற்பத்திக்கும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு முதலீட்டாளருக்கு 1 மெ.வா., முதல் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கும் திட்டமாக இருந்தால், இத்திட்டம் வெற்றிகரமாக அமையும். ஒரே இடத்தில் பல முதலீட்டாளர்கள் இந்த பூங்காக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். அதே நேரத்தில் ஒரே இடத்தில் 300 மெ.வா., சோலார் பூங்கா அமைக்க நேரிட்டால் அரசுக்கும், துணை மின் நிலையங்கள், உயர் மின் அழுத்த வினியோகம் செய்ய குறைந்தது 1500 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இவ்வாறு சோலார் பார்க்கை முதல் கட்டமாக வைத்து கொள்ளாமல் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஒன்று முதல் மூன்று மெ.வா., சிறு திட்டங்களை தமிழகத்தில் உள்ள குறைந்தது 250 பஞ்சாயத்துக்களில் நடைமுறை படுத்த ஆவன செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது . அரசு ஏற்படுத்தும் சோலார் கொள்கையும், அந்த கொள்கையில் ஏற்படுத்தும் நம்பிக்கையும் தான், முதலீட்டாளர்களை தமிழகத்தில் சோலார் மின் நிலையங்களை துவக்க ஈர்க்கும்.
குஜராத் கொள்கை: ஜவகர்லால் நேரு தேசிய சோலார் மிஷன் திட்டத்தை அடுத்து, குஜராத் தனக்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்கையை அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அங்குள்ள அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ.15 வீதம் 12 ஆண்டுகளுக்கு பெற்று கொள்ளவும், மீதமுள்ள 13 ஆண்டுகளுக்கு ரூ.12 வீதமும் பெற்றுக்கொள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. திட்டத்துக்கான நிலத்துக்கு பதிவுக் கட்டணம், வரி ஆகியவற்றில் குஜராத் அரசு சலுகையும் அளிக்கிறது. நிலம் கையகப்படுத்துவது முதல் மின் மீட்டர்களை பொருத்துவதற்கான அனைத்து துறைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து ஏற்படும் பிரச்னைகளை களைய அதிகாரி நியமிக்க படுகிறார். உயர் அதிகாரி தலைமையில் ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் அளிக்கும் முறையையும் அந்த அரசு கடைப்பிடிக்கிறது.
குஜராத்தில் இந்த வெற்றி பார்முலாவை தொடர்ந்து, ராஜஸ்தான், அரியானா, மேற்கு வங்கம், டில்லி, மகாராஷ்ட்ரா, ஒடிசா, ஆகிய மாநிலங்கள் தனிக் கொள்கையை வகுத்துள்ளன. இருந்தும் குஜராத் போல், இந்த மாநிலங்களில் அதிக அளவு சோலார் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. இதற்கு காரணம் குஜராத் போல் அதே விலைக்கு சோலார் மின்சாரத்தை வாங்கிய போதிலும், குஜராத் போல் அதிகாரிகள் மட்டத்தில், ஒத்துழைப்பு இருக்காது. என்ற நம்பிக்கையும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பிரச்னையாலும் சில மாநிலங்களில் கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்னையாலும், தங்கள் முதலீட்டை குஜராத்தில் அதிகப்படுத்துகிறார்களே தவிர, இந்த மாநிலங்களில் போக வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு வேலை தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தியை கூடுதல் விலையில் வாங்குவார்கள் என்று திட்டம் வகுத்து கொடுத்தால் மட்டுமே தமிழகத்தின் பக்கம், இவர்களை ஈர்க்க முடியும். 
அதிகாரிகள் ஒத்துழைப்பு: தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு பிரசித்தி பெற்றது. இவர்களால் ஒரு போதும் குஜராத் அதிகாரிகள் போல் தொழில் செய்ய வருபவர்களுக்கு ஓத்துழைப்பு கொடுக்க முன் வரமாட்டார்கள். இதை ஈடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு குஜராத்தை விட அதிக சலுகை வழங்கினால் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறும். மின் துறையில் உள்ள பல அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி என்றாலே ஒரு நம்பிக்கை இல்லாத, முடியாத ஒரு திட்டமாக கருதுகிறார்கள். சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.15 செலவாகும் என்பது தான் இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம். மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பிற மாநிலங்களில் இருந்து யூனிட்டுக்கு ரூ.13 வரை கொடுத்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகிறது. சில சமயங்களில் டீசல் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்பவர்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.12 வரை விலை கொடுத்து வாங்குகிறது. இப்படியிருந்தும் சூரிய ஒளி ரூ.15 கொடுக்க வேண்டுமே என்று அதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர ஒரு மெகா வாட்டுக்கு 14 கோடி முதலீடு செய்ய தனியார் முன் வருகிறார்களே என்று நினைப்பதில்லை. அரசு செய்ய வேண்டிய முதலீட்டுக்கு பதில் தனியார் செய்ய முற்படும்போது அதை ஊக்குவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைப்பதில்லை. முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி, அரசு அதிகாரிகளின் தலையீடே இல்லாமல் ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தாலே அரசு நினைக்கும் பல அடிப்படை திட்டங்கள் வெற்றிகரமாக முடியும்.
அதிகாரிகளின் நிலை: ஆற்காடுவீராசாமி அமைச்சகத்தின் கீழ் இருந்த சில அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் விழிப்புணர்வு இல்லாததும், நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாததும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் தான் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை இவ்வளவு மோசமாக இருந்தது. இதுவே கடந்த ஆட்சிக்கு ஏற்பட்ட மிக பெரிய கெட்ட பெயராகும். சூரிய மின் திட்டத்தின் மூலம் ஒரு மெகா வாட்டிற்கு 14 கோடி தேவைப்படுவதால் இதை தயாரிக்க ஒரு யூனிட்டிற்கு ரூ.12 ஆகும். தனியாரிடமிருந்து இதை பெறும்போது, அவர்கள் ரூ.15 க்கு குறையாமல் விற்பார்கள். அதனால் அரசு மானியம் இல்லாமல் சூரிய மின் ஒளி திட்டம் நிறைவேற்ற முடியாது. அனல் மின் நிலையத்திற்கு ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 5 கோடி தான் ஆகும் என்று கூறும் அதிகாரிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அனல் மின் நிலையம் குறைந்தது 1000 முதல் 3000 மெகா வாட் நிலையமாக தான் இருக்க முடியும். இது போக திட்டத்தில் வராத செலவாக அனல்மின் நிலையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கு (Sub Station) மற்றும் மின் விநியோகம்) ஒரு மெகாவாட் 5 கோடி செலவு ஏற்படும். இதை திட்ட செலவில் சோர்க்காமல், அரசு பட்ஜெட்டில் சேர்க்கப்படுகிறது. இதனாலே அனல்மின் நிலையம் அமைக்க வெறும் 5 கோடி ரூபாய் தான் ஆகும் இவர்கள், மேலும் அரசு செய்யும் செலவை சேர்க்காமல் அனல்மின் நிலையம் மூலம் பெறப்படும் ஒரு யூனிட்டிற்கு ரூ.3 க்கு குறைவாக கிடைக்கும் என்று அரசை நம்ப வைக்கிறார்கள். 
எப்படி செயல்படுத்துவது: சூரிய ஒளி மின் திட்டத்தை அமல் செய்ய, தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓர் அதிகாரியை தமிழ் அரசு நியமிக்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை பெற வேண்டியிருப்பதாலும் அத்துறையினரின் ஈடுபாடும் உதவியும் தேவைப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு அஞ்சியே முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஆகவே, தலைமைச் செயலர் அளவிலான அந்தஸ்தில் இருந்தால் தான் மற்ற துறை செயலர்கள் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட முடியும். இது வளரும் தொழில்நுட்பம் கொண்ட துறை என்பதால் இத்துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிலரை உறுப்பினராகவும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
கிராம ராஜ்யமே ராம ராஜ்யம்: கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்த்தால், கிராம மக்கள் நகரங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள். நகர வளர்ச்சி மற்றும் நெருக்கடி தீர்க்க அரசு செய்யும் செலவு கோடிக்கணக்கில் குறையும். கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லை. இருந்தாலும் தாழ்வழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளை காக்கும் இன்குபேட்டர், அறுவை சிகிச்சை அறைகளுக்கு போதுமான மின்சாரம் இல்லை. உயிர்காக்கும் கருவிகளை இயக்கவும் மின்சாரம் இல்லை. விதைகளை பாதுகாக்க, உற்பத்தி செய்த காய்கறி பழங்களை காப்பாற்றவும், கால்நடை இனவிருத்திக் கூடங்களை இயக்கவும் மின்சாரம் இல்லை. இந்நிலை மாற ஒவ்வொரு பஞ்சாயத்தும் 2 மெ.வா., மின்சாரத்தை நிறுவி அவர்களே மின்வினியோகம் செய்யும் முறைக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. 2003ம் ஆண்டு மின்சார உற்பத்திச் சட்டத்திலும் இதற்கான வழிமுறை இடம்பெற்றுள்ளது. 
பஞ்சாயத்து மட்டத்திலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதற்காக சோலார் தொழிலில் ஈடுபட்டு வரும் Wipro, Tata BP, Moserbaer உள்ளிட்ட நிறுவனங்களை பயன்படுத்தினால், அவர்களே இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி சோலார் மின்சார திட்டத்தை நிறுவி அதனை விநியோகித்தும் செயல்படுத்தியும் கொடுப்பார்கள். அரசு இதற்கு உத்தரவும், தனிக்கொள்கையும் ஏற்படுத்தி கொடுத்தால் போதும். 3 ஆண்டுகளில் குறைந்தது 200 பஞ்சாயத்துகளில் 2 மெ.வா., திட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு திடமான எண்ணமும், சரியான திட்டமும் நடைமுறைப்படுத்தும் வைராக்கியமும் நேர்மையான அதிகாரிகளும் இருந்தால் போதுமானது.
தேசிய சோலார் மிஷன் தமிழகத்தின் பொறுப்பு என்ன?:கடந்த 2009 நவம்பரில், தேசிய சோலார் மிஷன் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக 2010-13 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. 2010ல் துவங்கும் முதல் கட்டத்தை இரண்டாக பிரித்து, 30 நிறுவனங்களுக்கு 150 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்யலாம். தமிழகத்தில் தூத்துக்குடியில் 5 மெ.வா., மின் உற்பத்திக்கு ஒரு தனியார் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
இக்கொள்கையின் படி, தேசிய அனல்மின் உற்பத்திக்கழக வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.டி.பி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிட்.,) எனும் அமைப்பு தான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல்படுகிறது.
இந்த அமைப்புதான் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 17.91 விலை கொடுத்து, இருபத்தைந்து ஆண்டு கால ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும். தற்போது மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், தேசிய சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பொறுப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை.
தேசிய சேலார் மிஷன் திட்டப்படி, சூரிய ஒளி மின்உற்பத்தி செய்யும் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 17.91 வீதம் மின்சாரத்தைப் பெற்று, என்.டி.பி.சி., தன்னிடம் உள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாத மத்திய தொகுப்பிலிருந்து 3 மடங்கு மின்சாரத்தைச் சேர்த்து மாநிலங்களுக்கு திருப்பி வழங்கும். உதாரணமாக ஒரு சூரிய ஒளி மின்திட்டத்தில் 1000 யூனிட் மின் உற்பத்தியானால், 3000 யூனிட் சேர்த்து, 4 ஆயிரம் யூனிட்டாக மாநிலத்திற்கு திருப்பி வழங்கும். இதனால் மாநிலங்கள் பெறும் மின் உற்பத்திக்கு ரூ. 5.50 வீதம் என்.வி.வி.என்.,க்கு செலுத்தினாலே போதும். இதன் மூலம் தேசிய அனல் மின்கழக நிறுவனத்துக்கு (என்.டி.பி.சி.,) ஏற்படும் நஷ்டம் மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சமாளித்து கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட சதவீதம்: ஒவ்வொரு மாநிலமும் அம்மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபுசாரா மின்சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்குமுறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் அப்ளிகேஷன்) என்று பெயர். காற்றாலை மின் உற்பத்தியால் இந்த இலக்கை தமிழகம் எளிதில் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி குறிப்பிட்ட சதவீதம் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தனி ஆர்.பி.ஓ., தேசிய சோலார் மிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.பி.ஓ.,வை கடைபிடிக்காத மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் மின்வினியோகம் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசு குறைத்து விடும் அபாயம் உள்ளது.
அதன்படி, 2010 முதல் ஒரு மாநிலம் பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தில் 0.25 சதவீதம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து 2022ல் இதன் மொத்த உற்பத்தி 3 சதவீதமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மில்லியன் யூனிட்டுகள் செலவானது. இதில் 0.25 சதவீதத்தை கணக்கிட்டால் 100 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சிவகங்கையில் மோசர் பெயர் நிறுவனம் மத்திய அரசின் பழைய திட்டத்தின் படி, 5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தியை மட்டுமே துவக்கி உள்ளது.
தேசிய சோலார் மிஷன் திட்டப்படி, 2010-11 ஆண்டில் இரண்டாவது கட்டத்தில் 500 மெ.வா., திட்டங்களுக்கு இந்த ஜூன் மாதம் மத்திய அரசு டெண்டர் விட உத்தேசித்துள்ளது. இது போக சிறு முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில், ஆர்.பி.எஸ்., எஸ்.ஜி.பி., எனும் மற்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 7 நிறுவனங்கள் தேர்வாகின. அடுத்த மார்ச் மாதத்துக்குள் உற்பத்தி துவக்க வேண்டும். 
இன்ஜினியரிங் கல்லூரிகளில் சூரிய ஒளி மின்உற்பத்தி: கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள் அவர்கள் உபயோகிக்கும் மின்சாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். 2 ஆண்டுகளில் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகள், திருமண மண்டபங்கள், கம்யூனிட்டி ஹால்கள், கிளப்புகள் என்று இத்திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டே போகலாம்.
தமிழகத்தில் 600 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவை குறைந்தபட்சம் 500 கி.வா., முதல் 1000 கி.வா., வரை மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. குறைந்தது 100 கி.வா., சோலார் மின் உற்பத்தியை செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும். இதற்கு அவர்கள் ஒன்றரைக்கோடி வரை முதலீடு செய் வேண்டும். இதனால் 60 மெ.வா., மின்உற்பத்தியை இன்ஜினியரிங் கல்லூரிகள் வழியாக உற்பத்தி செய்ய முடியும். இன்ஜினியரிங் கல்லூரிகள் கிராமப்பகுதியில் அதிகம் இருப்பதால் இடப்பற்றாக்குறை என்ற பிரச்னை இல்லை.
பயோ கேஸ்: 500 பேருக்கும் மேல் சாப்பிடும் கேன்டீன்கள் ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்களில் சமையலுக்கென அதிக மின்சாரம் செலவாகிறது. இதற்கு இந்த சமையல் கூடங்களில் சூரிய ஒளி மூலம் தான் வெந்நீர் உற்பத்தி செய்ய வேண்டும். அதேபோல், உணவுக்கழிவுகளிலிருந்து பயோகேஸ் உற்பத்திக்கான திட்டத்தை நிறைவேற்றவும் தமிழக அரசு உத்தரவிடவேண்டும். சில மாநிலங்கள் இம்முறையை பின்பற்றி வருகிறது. பாபா அணு ஆராய்ச்சி கழகம் இதற்கென தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. தினமும் 500 கிலோ உணவு மற்றும் காய்கறி கழிவிலிருந்து 29 கிலோ எல்.பி.ஜி.,க்கு இணையான பயோகேஸ் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு குறைந்தது ரூ. 5 லட்சம் முதலீடு தேவைப்படும். இதையே 2 ஆண்டுகளில் அனைத்து கேன்டீன், ஹோட்டல்கள் திருமண மண்டபங்களில் நிறுவ அரசு உத்தரவிடவேண்டும். மின் நிதிக்கழகத்திலிருந்து இதற்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இதில் முதலீட்டாளர்களுக்கு 2 ஆண்டுகளில் முதலீடு செய்த பணத்தை மீட்டுவிடும் வாய்ப்புள்ளது.
வாட்டர் ஹீட்டர்கள்: பெங்களூரு மற்றும் டில்லி போல, சூரியஒளி வாட்டர் ஹீட்டர்களை ஊக்குவிக்க, அதை நிறுவும் வீடுகள் மற்றும் பிளாட்டுகளுக்கு மட்டும் வீடுகட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், கேன்டீன், ஹோட்டல்கள், மடங்கள், சர்ச் உள்ளிட்டவற்றில், குறிப்பதற்கான வெந்நீர் தேவை அதிகம் உள்ளது. ஏற்கனவே மானியமும் குறைந்த வட்டி வங்கிக்கடனும் நடைமுறையில் உள்ளது. அரசு கண்டிப்பாக சட்டம் இயற்றினால் ஒழிய இதை நிறுவ யாரும் முன்வரமாட்டார்கள். 
நியான் விளக்குகள்: நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் நியான் விளக்குகளை பயன்படுத்துகின்றன. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதிக விலை கொடுத்து அந்நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குகின்றன. நியான் விளக்குகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அதிக விலை கொடுத்தாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டில்லியில் உள்ள விளம்பர பலகைகள் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தியே விளக்குளை எரிக்கின்றன. அதுபோல், நியான் விளக்குகளுக்கும் இம்முறையை
தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும்.]

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்...

R.SANKAR; கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்...: "கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி! கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத..."

கலைஞரின் அந்தரங்கத்தை  அம்பலப்படுத்திய   ஆனந்த விகடன்-  தி மு க  அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி!

கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!  
ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!
கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!
42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக்   காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.
இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.
கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.
தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள். இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!
குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.  ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.
ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார். கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!
 இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமா க்காரர்கள் சின்னா பின்னமானதைப் போல வேறு யாரும் ஆகவில்லை! திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.
பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி-யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!
 கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!
இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!
 கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!
 மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!
 தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
 தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார்.  இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!
 ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!
 மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

 மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!
  சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!
கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!
 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.

ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும். தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
மின்மடல் வழியே பகிர்ந்தவர் திரு.குமார்