Monday, April 8, 2013

ஹெல்த் ஸ்பெஷல்

அழகும், ஆரோக்கியமும் நிறைந்த நீடித்த வாழ்க்கைக்கு சில பரிந்துரைகள்.




அழகும், ஆரோக்கியமும் நிறைந்த நீடித்த வாழ்க்கைக்கு சில பரிந்துரைகள்.


எப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம், எப்போதும் நீண்ட உற்சாகமான வாழ்வு வாழ முன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்த ஒரே வாசகம் `தினமும் ஒரு ஆப்பிள்' என்பது தான். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும்... எந்த ஒரு டாக்டரையும் சந்திக்க வேண்டி இருக்காது என்று நம்பப்பட்டு வந்த காலம் இப்போது இல்லை. அழகும், ஆரோக்கியமும் நிறைந்த நீடித்த வாழ்க்கைக்கு ஒரு ஆப்பிள் மட்டும் போதாது என்று அறிவியல் நிபுணர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். மூளையின் செயல்திறனைத் தூண்ட, இருதய நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க, தோல் இளமையும் பூரிப்பும் நிறைந்து மின்ன மருத்துவ நிபுணர்கள் வேறு சில வழிகளை பரிந்துரைக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டவற்றை கவனித்துப் பயன்படுத்துங்கள்.

1
முடிந்தவரை சற்று எடை குறையுங்கள்

நான் சற்று எடை அதிகம். ஆனால் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்பவர்களும் கூட எடை குறைத்தால் நல்லது. காரணம் எடை அதிகம் என்பது எதிரிலிருக்கும் ஆளை கிறங்கடிக்கும் ‘Hot’ லிஸ்டில் வராது. தவிர எடை அதிகம் எந்த நேரத்திலும் உங்கள் காலை ஆரோக்கியமற்ற குழியில் தள்ளிவிடும். சிகரெட்டுக்கு அடுத்தபடியாக எடை அதிகமாக இருக்கிற காரணம்தான் வாழ்நாளைக் குறைக்கிற விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது என்கிறார்கள்.

கூடவே கொழுப்புச் செல்களால் உருவாகும் ஹார்மோன் நீரிழிவு நோயை உருவாக்குவதில் அதிகம் பங்கு பெறுகிறது.

மிக சாதாரணமாக மூன்று கிலோ அதிக கொழுப்பு கூட உடலில் இன்சுலின் இயங்குதலை தடை செய்கிறது. கொழுப்புச் செல்களால் உருவாகும் `சைட்டோனகன்' என்கிற பொருள் இரத்தக் குழாய்களை பாதித்து, தடிக்க வைத்து இருதயத்தைப் பாதிக்கிறது. எல்லா மனிதர்களைவிட எடை அதிகம் இருப்பவர்களில் 75 சதவிகிதத்தினருக்கு வாழ்நாள் அளவு குறைகிறது என்று உறுதிப்படுத்துகிறார்கள். அதற்காக எடை குறைக்க மிக மிக வேகமாக உணவில் கை வைக்காதீர்கள். ஆரோக்கியமாக எடை குறைக்கும் வழிகளில் ஈடுபடுங்கள்.

2
மீன் பிடியுங்கள்

மேற்சொன்ன வழி என்பது உயிரோடு இருக்கும் மீனை தண்ணீரில் பிடியுங்கள் என்பதல்ல. தட்டில் சமைத்த மீனை ஒரு பிடிபிடியுங்கள். உலகின் பல்வேறு நாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்தவர்களை எல்லாம் ஆய்வு செய்ததில் அவர்கள் இருதயநோய், நீரிழிவு, கேன்ஸர், மூளை உறைவு போன்று எதிலும் பாதிக்கப்படாமல் இருந்தார்கள். இதற்குக் காரணம் அவர்கள் உணவில் இருந்த மீன். மீனில் இருந்த ஓமேகா 3 என்ற ரகசியம்! இது இரத்தத்தில் அதிக ப்ளேட்லெட்டுகளை உற்பத்தி செய்து நீண்டநாள் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றது. உணவில் 3 கிராம் ஓமேகா 3, 50 சதவிகித ஹார்ட் அட்டாக்கைத் தடுக்கிறது. மோசமான டிரைகிளிசைரைட் அளவைக் குறைக்கிறது. ஆர்த்ரைடிஸ் வலியைப் பெரிதும் குறைக்கிறது. கேன்ஸர் உருவாவதைத் தடுக்கிறது, மூளை செயல்படும் வேகத்தைக் கூட்டுகிறது.

தோலை மினுமினுப்பாக்குகிறது. அதன் சுருக்கத்தைக் குறைக்கிறது. இவை தவிர மனஅழுத்தம், அல்சைமர் நோய், சில வகை கண் பிரச்னைகள் என எல்லாவற்றுக்கும் ஒரு மா மருந்துபோல மீன் கண் சிமிட்டுகிறது. சமீபத்திய ஒரு ஆய்வின்படி கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுகிற பெண்களுடைய குழந்தைகளின் மினி அதிகரிக்கிறது என்கிறார்கள். ஆக நல்ல மீன் சாப்பிடுங்கள். சைவர்கள் மாசுபடாத மீன் எண்ணெய் மாத்திரைகளைச் சாப்பிடுங்கள்.

3
தட்டில் வானவில்லை வரவழைத்து சாப்பிடுங்கள்

இது கேட்க அழகாக இருப்பது போலவே, சாப்பிட்டால் பார்க்கவும் நம்மை அழகாக மாற்றும். வானவில் என்றால் வேறொன்றும் இல்லை. பலநிற காய்கறிகள். அவ்வளவுதான். தட்டில் எத்தனை நிறத்தில் காய்கறிகள் கூடுகிறதோ அவ்வளவு ஆரோக்கியம் உங்கள் உடலிலும் கூடுகிறது என்று அர்த்தம். தாவரங்கள் உருவாக்குகிற வேதிப்பொருட்கள் அவற்றின் வளர்சிதை மாற்றத்தில் மட்டும் அடிப்படையாகப் பங்கு பெறுவதில்லை. அவற்றின் உயிர்வாழ்தலைக் காக்கவும் பங்கு பெறுகின்றன. தாவரங்களின் இதே செயல் நமக்குத் தேவைப்படுவதால் தாவர உணவின் வழி நமக்குக் கிடைக்கிற வேதிப்பொருட்கள் நமக்கும் அடிப்படை ஆகின்றன. இதனால் நோய் எதிர்ப்புத் திறன், தோல் ஆரோக்கியம் என பல்வேறு விஷயங்கள் மேம்படுகின்றன. ஆக அத்தனை நிறத்திலும் காய்கறிகள் சாப்பிடுங்கள்.

4
ஓட்ஸ் பருகுங்கள்

காலையில் டோஸ்ட், ஜூஸ் என அவசரப்பட்டதெல்லாம் விடுங்கள். அதைவிட ஆரோக்கியம் தரும் ஓட்ஸ் பருகுங்கள். இதில் இருக்கிற `பீட்டா குளகான்' என்கிற தாது நம் நோய் எதிர்ப்பு சக்தியில் அபார பங்கு வகிக்கிறது. தவிர ஓட்ஸ் என்பது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் கலவை. இதனால் சுலப ஜீரணம் என்பதைத் தவிர்த்து நம் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை திறமையாக கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. தவிர ஒரு ஸ்பாஜ் போல ஜீரணத்தின் போது கொலஸ்டிராலின் மீது செயல்பட்டு அவற்றை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இருதய நோய்கள் குறைகின்றன. தவிர ஒரு பவுல் ஓட்ஸ் தருகிற கலோரி 455. நம் தினசரி தேவையின் பாதி நல்லவைகளை இந்த ஒரு கப் மட்டுமே கொடுத்துவிடுகிறது. ஒரு ஆய்வின்படி காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுகிறவர்கள் மதியம் சாப்பிடும்போது 30 சதவிகித கலோரி குறைவாகச் சாப்பிடுகிறார்கள். ஆக ஓட்ஸ் நேரடியாக உங்கள் இடுப்பில் கை வைத்து அளவைக் குறைக்கத் தொடங்கிவிடுகிறது.

5
சந்தோஷக் கோப்பையைக் கையில் ஏந்துங்கள்

நாம் நினைப்பதில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். நினைப்பு - எண்ணம் நம் உடலினுள் சர்க்கியூட்டை கவனித்துச் செயல்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. வருத்தம், மனஅழுத்தம் போன்றவற்றிற்கு உடல் நோய்களோடு நெருக்கமான தொடர்பு உண்டு என்பது பல்வேறு நிலைகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

1960-ல் மினிசோட்டாவில் நடந்த ஆய்வில் சிரிப்பவர்கள், வருத்தப்படுபவர்கள் இரு பிரிவினரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அடிக்கடி வருத்தப்படுபவர்கள் - எதிர்மறையாகச் சிந்திக்கிறவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு குறைந்திருத்தது. சந்தோஷமாக இருங்கள்.

6
குடும்பத்தினருடன் நெருக்கமாகுங்கள்

அமெரிக்காவின் அல்லயன்ஸ் ஆஃப் ஏஜிங் ரிசர்ச் நடத்திய ஆய்வில் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பது ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று முடிவு கொடுத்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் காரணமாகக் காட்டுவது ஸ்ட்ரெஸ் - மனஅழுத்தத்தை. குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கிறவர்களிடம் இந்த மனஅழுத்தம் அதை மிகமிகக் குறைக்கிறது என்கிறார்கள். இது இருதயநோய்கள், மனச்சோர்வு போன்றவற்றிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வாரத்திற்கு ஒரு நாள் போதும், ஆரோக்கியத்தின் சிரிப்பு கேட்கத் தொடங்கிவிடும்.

7
மூளைக்கு வேலை

குறுக்கெழுத்து, நெட்டெழுத்து என மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுங்கள். இது உங்கள் பிறந்தநாள் மெழுகுவர்த்திகளை அதிகப்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். செஸ் போல ஏதோ ஒன்றில் மடக்கி மடக்கி மூளைக்கு வேலை கொடுப்பதில் ஞாபகசக்தி அதிகரிக்கிறது. டிமன்ஷியா என்கிற மூளை மழுங்கடிப்பு நோய் ஏற்படும் அளவு குறைகிறது. சொடுக்கு, ஃபளீஸ் என ஏதோ ஒன்று... சட்டென்று தயாராகுங்கள்.

8
எந்த பார்ட்டியிலும் வைன்

ஏதோ ஒரு காரணம் சொல்ல எங்காவது ஏதோ ஒன்றைக் குடிப்பதற்கு பதில் சிவப்பு நிற வைன் மீது கை வையுங்கள். பல்வேறு ஆய்வுகளின்படி வைன் இருதய நோய்களைத் தடுக்கிறது. பற்சிதைவைத் தடுக்கிறது. மேல் சுவாசக் குழாயில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. தவிர வைனில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் என்கிற மகத்துவமான பொருள் அடர்ந்து இருக்கிறது. இது உங்கள் முதுமையைத் தடுக்கிறது. ஒரு டச்சு ஆய்வின்படி வாரத்திற்கு மூன்று முறை வைன் அருந்துபவர்கள் ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருதயம், மற்ற காரணங்களால் இறக்கிறார்கள். ஆனால் மற்றொரு விஷயமும் இதில் இருக்கிறது. அளவே மருந்து.

9
தேவை இரவுத் தூக்கம்

தொடர்ந்து இரவில் வேலை செய்வது, தூக்கத்தை பலி கொடுப்பது இந்த இரண்டும் இளமைக்கும், ஆரோக்கியத்திற்கும் எதிரி. உடல் எடை கூடுவது, மனஅழுத்தம், தளர்ந்த தோல், கண் கருவளையம், இருதயப் பிரச்சினைகள் என பலவற்றோடு தூக்கமின்மை தொடர்பில் இருக்கிறது. கூடவே கேன்ஸர். உடல் செல்லின் வேலைகளில் பங்கு பெறும் வளர்ச்சி ஹார்மோன் மேல் தூக்கமின்மை பிரச்சினைகளை ஏற்படுத்துவதே இதற்குக் காரணம்.

10
மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்

பிரமாதமான அழகான தோலின் காரணம் என்ன? வைட்டமின் சி. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிகல் நியூட்ரிஷன் வெளியிட்ட ஆய்வின்படி உணவில் அதிக வைட்டமின் சி மற்றும் லனோலியிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்கள் அற்புதமான வசீகரமான தோல் பெறுகிறார்கள் என்பதுதான். மற்றொரு தேவையான வைட்டமின் ஙி. முக்கியமாக `ஃபோலேட்' என்பது. இது இருதயத்தையும், மூளையையும் வயது கூடுவதால் ஏற்படுகிற பிரச்சினைகளிலிருந்து காக்கிறது. இவை செய்கிற முக்கிய வேலை உடலில் ஹோமோசிஸ்டின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். இது அதிகரிப்பது என்பது இருதயநோய்கள், மூளை உறைவு, அல்சைமர் போன்ற நோய்களோடு தொடர்பு படுகிறது. ஆக வைட்டமின்களை தனித்தனியாக எடுத்துக் கொண்டாலும், சேர்ந்து மல்ட்டிவைட்டமினாக எடுத்துக் கொண்டாலும் சரி இளமைக்கும், ஆரோக்கியத்திற்கும் அது உறுதி.

11
சந்தோஷமான விழாக்களில் சமூகத்தோடு
பங்கு பெறுங்கள்

ஹாப்பி மொமன்ட்ஸ் என்பது இருதயத்தோடும், நோய் எதிர்ப்போடும் சம்பந்தப்பட்டது என்பதை உறுதியாக மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு நிரூபிக்கிறது. உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கும் விழாக்கள் எதுவானாலும் கலந்து கொள்ளுங்கள். நிம்மதி என்பதே ஆரோக்கியத்தோடு தொடர்பு உடையது.

12
நல்ல மசாஜ் செய்து கொள்ளுங்கள்

தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு, தசைப் பிரச்சினைகள் போன்ற பலவற்றுக்கு மசாஜ் போன்ற சிறந்த மெடிசன் வேறு எதுவும் இல்லை என்கிறார்கள். நல்ல மசாஜ் மூலம் உடலின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவு நிறைய குறைகிறது. அதே நேரத்தில் நினைவு தரும் செரடோனின், டோபமைன் போன்றவற்றின் அளவு கூடுகிறது. இதனால் இருதயத்தின் தேவையற்ற வேகம் குறைக்கப்பட்டு, இரத்த அழுத்தம் சமநிலைப்படுத்தப்படுகிறது. நரம்பு மண்டலத்தின் வலி உணரும் பகுதிகள் முடக்கப்படுகின்றன. மசாஜ் மூலம் தசைகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது. ஆக நல்ல மசாஜ் இளமையின் திறவுகோல்.

13
மெடிடேஷனுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள்

தியானத்தின் பலன்கள் அதுவும் மனஅமைதி தரும் பலன்கள் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும். கூடவே அது தரும் ஆரோக்கியம் பற்றியும் தற்சமயம் அதிக செய்திகள் வந்திருக்கின்றன. இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் நாம் எதிர்பாராத மிகமிக நல்ல பலன்களை தியானம் தருகிறது என்று உறுதி செய்திருக்கிறார்கள். தியானத்தில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. நீங்கள் ஏதோ ஒன்று கற்று நிறைய பலன் பெறுங்கள்.

14
நண்பர்களைக் கூட்டுங்கள்

வீட்டில், தெருவில், வேலையில் தனித்து திரியும் நபர்களைவிட, எங்கும் நண்பர்களை வைத்துக் கொண்டு சிரித்துப் பழகும் நபர்கள் மேலும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். staying young என்கிற புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் மைக்கேலின் ஆய்வு இதுதான். நிறைய நண்பர்கள் இருக்கிறவர்கள் இளமையும், ஆரோக்கியமும் கூடுகிறது என்பது. ஜிம், யோகா, சீட்டு, சினிமா என எங்கும் நண்பர்களோடு இருங்கள். பேசி அந்த மகிழ்வை பகிர்ந்து கொள்ளுங்கள்.

15
காலை வணக்கம் கிரீன் டீ-உடன் இருக்கட்டும்.

கிரீன் டீயின் பலன்களை நீங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சமீபத்தில் ஆய்வொன்றின்படி கிரீன் டீ-யில் இருக்கும் `காட்டிச்சின்' செல்களைத் தூண்டி கொழுப்பை வெளியேற்றுகிறது. உடல் கலோரிகளைச் செலவழிப்பதில் துணை நிற்கிறது. மேலும் எப்போதும் சொல்வது போல இருதயத்தின் நல்ல தோழன் கிரீன்டீ. மூளை உறைவைத் தடுப்பதிலும் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர, கிரீன் டீ- யின் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இளமையை நேசிப்பவை. கிரீன் டீ சாப்பிடத் தொடங்குங்கள். வாழ்வை பசுமையாக வைத்திருங்கள்.

16
தானியங்களைப் பயன்படுத்துங்கள்

பனிசோட்டா பல்கலைக்கழகத்தில் பதினொரு ஆண்டுகள் நடந்த ஆய்வில் தினசரி அதிகம் தானியங்களைப் பயன்படுத்துகிறவர்கள் இருதயம் மற்றும் கேன்ஸர் நோய்களிலிருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவதாக முடிவு சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் தானியங்கள் அவற்றில் இருக்கிற ஸ்டார்ச் உடன் அதிகமாக நார்ச்சத்தை வெளிப்புறத் தோலில் வைத்திருக்கின்றன. கூடவே வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அடர்த்தி மிகுந்த கார்போஹைட்ரேட்டுகள்.

17
உடலால் தேங்காதீர்கள்

Keep moving என்பதுதான் இதன் பொருள். ஸ்விட்ச் போட, மோட்டார் நிறுத்த, பஸ்பிடிக்க, படி ஏற என்று எங்கும் எப்போதும் எதற்காகவும் அசைந்து கொண்டே இருங்கள். நல்ல வேக நடை இன்னும் நல்லது. முப்பது நிமிட ஏரேபிக்ஸ் இரத்தக் குழாய்களில் படியும் வெள்ளை நிற அணுக்களை நகர்த்தி மறுபடியும் சுழலுக்குள் கொண்டு வருகிறது. தவிர மனம், உடலின் சக்தி உடற்பயிற்சிகளால் அதிகரிக்கிறது.

18
`அதில்' ஆர்வத்தோடு ஈடுபடுங்கள்

ஆம். அதில்தான் நல்ல செக்ஸ் ஆரோக்கியமான இளமைக்கு உங்களை நகர்த்திச் செல்கிறது. அப்போது வெளிவரும் என்டார்பின்ஸ் உடலின் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை பலமாகக் கட்டுப்படுத்துகிறது. உறவுக்குப்பின் உங்கள் துணையை கட்டி அணைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அப்போது வெளிவரும் ஆக்ஸிடோசின் இரத்த அழுத்தத்தைச் சமநிலைப்படுத்துகிறது.

19
அவ்வப்போது ஒருவேளை உணவைத் தவிருங்கள்

`120 வயதுக்கும் மேலே' என்கிற ஆய்வுப் புத்தகம் தரும் முக்கிய செய்தி கலோரி அளவைக் குறையுங்கள் என்பதுதான். இதனால் இரத்த அழுத்தம், கொலஸ்டிரால், நீரிழிவு போன்றவற்றில் நேரடி நல்விளைவு ஏற்படுகிறது. அதுவும் ஒருநாள் விட்டு ஒரு நாள் என ஒருவேளை உணவைத் தவிர்க்கும்போது நல்ல பலன் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்கள். உடனே சட் சட் என்று சாப்பாட்டை நிறுத்தி திணறாதீர்கள். கலோரிகளைக் குறைப்பதுதான் இலக்கு. முதலில் மசால்வடை, பேல்பூரியில் தொடங்கலாம்!

20
துணைவி துணைவருடன் வாக்குவாதத்தைத் தவிருங்கள்.

எமோஷனலாக துணைவருடன் சண்டை போடும் பெண்களின் திடீர் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருப்பதாக எலைன் என்கிற எபிடமியாலாசிஸ்டின் நீண்ட வருட ஆய்வுக் குறிப்பு சொல்கிறது. அவர் தவிர்க்கச் சொல்லும் வார்த்தைகள் சிலவற்றை கவனியுங்கள். ``நான் இப்படித்தான்,'' ``நீங்க திருந்தமாட்டீங்க...'' ``வேஸ்ட்'', ``உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க...'' இப்படியே சிலவற்றைச் சொல்கிறார். ஒரு வார்த்தையில் சொன்னால் இதுதான்: கணவன், மனைவிகள் கையில் பூதக்கண்ணாடி வைத்துக் கொள்ளாதீர்கள்.

 

ஹெல்த் ஸ்பெஷல் ! எலும்பே நலமா?

ஹெல்த் ஸ்பெஷல் !
சூப்பர் டிப்ஸ்....

எலும்பே நலமா?

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

செல்லமே..செல்லமே!

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்... டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.


55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள்

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

மேனி எழில்!

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

சர்க்கரையை சமாளிப்போம்!

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்


75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.


79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்... கவனி... செல்!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

வாங்க பழகலாம்!

90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு-2

அல்சரை அடித்துவிரட்ட கடுகு- தேங்காய் பச்சடி !
'ஒபிசிட்டி எனும் அதீத உடல்பருமன் நோய் உள்ளவர்களுக்கு இந்த இந்த உணவுகள்... நீரிழிவு எனும் சர்க்கரை குறைபாடுள்ளவர்களுக்கு இந்த இந்த உணவுகள்...'என்று கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். இனி, அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச் னையில் சிக்கியிருப்போருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன... அவற்றைத் தயாரிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் பார்க்கலாம்... அல்சர் பற்றிய சில விஷயங்களை அசைபோட்டபடியே!
'எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்' என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதிதான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்!
'வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது... ஏன் ஏற்படுகிறது?' என்பது பற்றி சென்னை, அரசு பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இங்கே பேசுகிறார்.
"எப்பவும் 'கபகப'னு எரியுது. பசியா இருக்குமோனு நெனச்சு சாப்பிட்டாலும், எரிச்சல் குறைய மாட்டேங்குது. அப்பப்ப, வாந்தி வேற வந்து இம்சைப்படுத்துது. உடல் எடையும் குறைஞ்சிடுச்சு. எதையுமே ருசியா சாப்பிடமுடியல. வயித்து வலியால சுருண்டு போயிடறேன்' இப்படி அலறி துடிப்பவர்களில் பெரும்பாலானோர் அல்சரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக் கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல... பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.
மற்றொரு காரணம், டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும்.
அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, 'ஹெச் பைலோரை' (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகையான பாக்டீரியா. உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம்.
இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான 'டியோடினம்'என்ற பகுதியில்தான் அல்சர் உருவாகும். இந்த வகை வயிற்றுப் புண்ணுக்கு 'பெப்டிக் அல்சர்' என்று பெயர். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று அமிலங்களால் சூழப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்துவிடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இரைப்பையில் சுரக்கக்கூடிய அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொண்டுவிடும்.
'வந்திருப்பது அல்சர்தானா... புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது... ஹெச் பைலோரை கிருமித்தொற்று இருக்கிறதா?' என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரீதியாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளிக்கலாம். எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.
வயிற்றில் புண் வந்து ஆறும்போது, அது தழும்பாக மாறும். இதனால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன்குடலுக்கு போகாது. எப்போதும் வயிறு 'திம்'என்று இருக்கும். இதையே சிலர், 'சாப்பிட்ட உணவு சரியா செரிமானம் ஆகல. வாயுத் தொல்லையா இருக்குமோ?' என்று நினைப்பார்கள். இப்படி அடைப்பு ஏற்படும்போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறுகுடலுக்கு போய்விடும். ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கிவிடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.
வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால்... அல்சரை அறவே ஒழித்துவிடலாம்'' என்றார் டாக்டர் சந்திரமோகன்.
அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகளை இங்கே தருகிறார் செஃப் ஜேக்கப்.
கடுகு-தேங்காய் பச்சடி
தேவையானவை: கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் - அரை மூடி (100 கிராம்), தயிர் - ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட்டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
வெஜிடபிள் அவியல் கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், சௌசௌ, சுரைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது - ஒரு கப், தயிர் - அரை கப் (50 மில்லி), சர்க்கரை - ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் - கால் கப் (25 கிராம்), பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 5 மில்லி.
செய்முறை: வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும்.
இதை சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.
இந்த ரெசிபிகள் பற்றி 'டயட்டீஷியன்'கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார்?
''செஃப் சொல்லியிருக்கும் இரண்டு ரெசிபியிலுமே தயிர் மற்றும் தேங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், உட லில் நன்மை செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவி யாக இருக்கும். வீரியமிக்க புண்களையும் ஆற்றக்கூடிய அருமருந்தான தேங்காய் எண்ணெயும் சேர்க்கப்படு வதால், வயிற்று எரிச்சல் குணமாகும். கடுகு சேர்த்திருப்பதால், புரதம், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் கிடைத்துவிடும். உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்'' என்றார் டயட்டீஷியன்.

கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதைத் தடுக்கவும் பல வழிகள் உண்டு

கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதைத் தடுக்கவும் பல வழிகள் உண்டு...
தலைமுடியானது திடீரென ஏதோ ஒரு காரணத்தால் கருமை குறைந்து போகக்கூடும். இளநரைகூட எட்டிப் பார்க்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்குக் கைகொடுக்கிறது வெட்டிவேர் தைலம். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, கருகருவெனவும் பராமரித்து, உங்கள் இளமையைத் துள்ள வைக்கும்.
வெட்டிவேர் (சிறுசிறு துண்டுகளாக) - 1 கப், ஜாதிக்காய் - 10... இவை இரண்டையும் முந்தைய நாள் இரவே காய்ச்சிய பசும்பாலில் ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து, இரண்டு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, நன்றாக ஓசை வரும்வரை காய்ச்சி இறக்கினால் வெட்டிவேர் தைலம் தயார்.
பிறகு, அரை மூடி தேங்காயைத் துருவி, அரைத்து அடுப்பில் வைத்து எண்ணெய் பிரியும் வரை காய்ச்சி வடிகட்டி, இதை வெட்டிவேர் தைலத்துடன் சேருங்கள். இந்தத் தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளலாம். தலையில் வியர்வையின் காரணமாக சுரக்கும் அதீத எண்ணெய் உறிஞ்சப்படுவதற்கு வெட்டிவேர் துணை புரியும். முடி வளர்ச்சியை ஜாதிக்காய் பார்த்துக் கொள்ளும். முடியை சீக்கிரமாக வளர வைக்கும் வேலையை பசும்பால் எடுத்துக் கொள்ளும். கருகருவென கூந்தலின் நிறத்தைப் பராமரிப்பது... தேங்காயின் வேலை.
'மூக்குனு இருந்தா... சளி இருக்கத்தான் செய்யும்' என்பார்கள். அதுபோல கூந்தல் என்றாலே... உதிராமல் இருப்பது என்பது அபூர்வம். கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதேசமயம், அதைத் தடுத்து நிறுத்தவும் பல வழிகள் உண்டு என்பதுதான் சந்தோஷமான சமாசாரம். அதில் ஒன்று... கீரை தைலம்!
அரைக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை இந்த ஐந்து இலைகளையும் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒரு நாள் வைத்திருந்தால்... தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயை தனியாகப் பிரித்து சேமியுங்கள். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால்... கூந்தல் உதிர்வது நின்றுவிடும். அது எந்தக் காரணத்தினால் உதிர்ந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையை இந்தக் கீரைத் தைலம் பார்த்துக்கொள்ளும்.
சரியாகச் சாப்பிடாமல் ரத்த சோகையால் முடிகொட்டுகிறது என்றால்... அதை அரைக்கீரை நிவர்த்தி செய்துவிடும். இந்தத் தைலத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை... இளநரைக்கு தடா போடும். உடல் உஷ்ணத்தால் முடி கொட்டிக் கொண்டி ருந்தால் அதை தடுத்து நிறுத்தும் வேலையை பொன்னாங்கன்னி பார்த்துக் கொள்ளும். பொடுகு அரிப்பினால் முடி வளர்வது தடைபட்டால், வெந்தயக்கீரை அதை நிவர்த்தி செய்வதோடு... மிருதுவாகவும் மாற்றி வைக்கும். உணவுப் பழக்கத்தாலும் முடி உதிர்வதுண்டு... இதன் காரணமாக முடி உதிராமல்... கட்டுக்குள் கொண்டு வர கற்பூரவல்லி உதவும்.

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?

உஷ்ணத்தை மாயமாக்கும் மாங்காய் பானகம்!
"அக்னி நட்சத்திரத்தைக் கடந்துவிட்ட பிறகும்கூட, 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு விலகியபாடில்லை. எங்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கும் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ள முடிகிறது'' என்று சொல்லும் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, முதலில் அதன் பாதிப்புகளைப் பற்றி பேசுகிறார். அதைக் கேட்டு முடித்த பிறகு, உஷ்ணத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான உணவுகளைப் பார்ப்போம்.
"கோடையில் வரும் 'ஹீட் ஸ்ட்ரோக்', அதிகம் பாதிப்பது வயதானவர்களைத்தான். வெப்பத்தின் காரணமாக... உடம்பு சூடாகி, மூளையின் செயல்பாடு குறையும். அதிகமாக வியர்த்து, மயக்கநிலைக்கு கொண்டு சென்றுவிடும். நினைவுகூட தப்பலாம். ரத்த அழுத்த நோயானது, உஷ்ண உடம்பு இருப்பவர்களை எளிதில் தாக்கும்.
பாலைக் காய்ச்சி, உடனே ஃப்ரிட்ஜில் வைக்காமல், ஆற வைத்துதானே வைப்போம். அதுபோல்தான், வெளியில் சென்றுவிட்டு, திரும்பியவுடன் பத்து நிமிடம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியாக எதைக் குடித்தாலும், இருமல், சளி உடனடியாக ஒட்டிக் கொண்டுவிடும். 'கசகசவென்று இருக்கிறது. ஒரு குளியல் போட்டால் தேவல' என்றபடி உடனடியாக குளிப்பதும் தவறு. அதுவும் நோயில் கிடத்திவிடும்.
வியர்வை அதிகம் சுரப்பதால், அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வயதானவர்களைப் பொறுத்தவரை, காலை பத்து மணி முதல் நான்கு மணி வரை வெளியில் செல்வதை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது நல்லது."
என்ன, டயட்டீஷியன் சொன்னதைஎல்லாம் உள்வாங்கிவிட்டீர்கள்தானே? இதோ... உங்களுக்கான ரெசிபிகள்..!
தர்பூசணி கீர்
தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - 75 கிராம், கன்டென்ஸ்டு மில்க் - 5 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப் பால் - ஒரு சிறிய கப், குங்குமப்பூ - சிறிதளவு, பால் க்ரீம் - ஒரு சிறிய கப்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில், பால், தேங்காய்ப் பால் பவுடர் இரண்டையும் சேர்த்துக் கலக்குங்கள். அது திக்காகிவிடும். பிறகு, தர்பூசணி தவிர, மற்ற எல்லாவற்றையும் அதில் சேருங்கள். கடைசியாக தர்பூசணியைச் சேர்த்துக் கலக்குங்கள். சற்றே நீர்த்து வரும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, காலை பதினோரு மணி வாக்கில் சாப்பிடலாம்.
மாங்காய் எலுமிச்சை பானகம்
தேவையானவை: மாங்காய் - 1, கருப்பட்டி வடிகட்டிய கரைசல் - 2 கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், துருவிய எலுமிச்சை தோல் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 துளி.
செய்முறை: மாங்காயைத் தோலுடன் துருவிக் கொள்ளவும். கருப்பட்டி கரைசலில் எலுமிச்சை தோல் துருவல், மாங்காய் துருவல், சுக்குப் பொடி சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கினால், பானகம் தயார்.
மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரை மணி நேரத்துக்குப் பிறகு, இதை அருந்தலாம். மாலை ஆறு மணிக்கு மேல் குடிப்பது நல்லதல்ல.
மாம்பழ தயிர் சாதம்
தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மாம்பழ கூழ் - 50 கிராம், தயிர், உப்பு - தேவையான அளவு, காய்ச்சிய பால் - ஒரு சிறிய கப், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சாதத்துடன் எல்லாவற்றையும் கலந்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். இந்த தயிர்சாதத்தை மதிய நேரம் சாப்பிடலாம்.
ரெசிபிகளைப் படித்துப் பார்த்த, 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, "மூன்றுமே, உஷ்ண நோய்களை விரட்டும் உன்னத ரெசிபிகள்தான். தர்பூசணி கீர் நல்ல எனர்ஜியை தரும். அதிக அளவு நீர்ச்சத்தும், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின், மினரல்ஸ் எல்லாம் கிடைத்துவிடும். கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மட்டும், கொழுப்பு நீக்கப்பட்ட பாலை காய்ச்சி சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், தர்பூசணிக்கு பதிலாக கிர்ணிப்பழம் சேர்த்து 'திக்'காக செய்து சாப்பிடவேண்டும்.
மாங்காய், நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டே இருப்பதால், தாகம் எடுக்காது. கருப்பட்டி ஜீரணத்தைக் கொடுக்கும். எலுமிச்சை தோலில் பைஃபர், விட்டமின், மினரல்ஸ் இருப்பதால், உச்சிவெயிலுக்கு ஏற்ற உற்சாக பானம்தான் மாங்காய்-எலுமிச்சை பானகம்.
அதேபோல், மாம்பழத்தில் பீட்டா கரோட்டின், பாலில் கொழுப்பு, தயிரில் புரதம், விட்டமின்-சி, கார்போஹைட்ரேட் இருப்பதால், மாம்பழ தயிர் சாதத்தில் எல்லாச் சத்துக்களுமே கிடைத்துவிடுகிறது. உடலை குளிர்ச்சியாக்கி, நல்ல எதிர்ப்பு சக்தியையும் தரும்'' என்று சொன்னார்.

இயற்கை தரும் பரிசு-இளநீர்-- மருத்துவ டிப்ஸ்


இயற்கை தரும் பரிசு-இளநீர்;
இனிய பானம் இளநீர்,பிணிகளை நீக்கும் சுவைநீர் இளநீர் இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர், இயற்கை அளித்தஇனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும்.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

பெண்களின் மாத விலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கும் இளநீரே மருந்து.

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

சிறுநீரகக்கல், சதையடைப்பு URINARYINFECTION; போன்ற கோளாறுகள் வந்துவிட்டால்முதல் மருந்தே இளநீர் தான்.

கோடைகாலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடியஇனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண்,ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம்ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தருமஇளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ ஆகாரம் மட்டுமேசாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவைச் சிகிக்சைபபுண் OPERATION SORE சீக்கிரம் ஆறிவிடும்..

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால்ஜீரண உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும
  • இளநீர் இயற்கை நமக்குத் தந்துள்ள புத்துணர்ச்சி தரும் இனிய பானம் தென்னை தரும் இளநீர் மிகவும் சுவையானது சத்தானது கோடையின் கொடுமையைத் தணிக்க வெப்ப மண்டல மக்களுக்கு இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம்.
  • தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டுமல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மையும் கொண்டது.
  • மனித உடலில் அதிக அளவு நீர்ச்சத்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இளநீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும்.
  • இளநீர் தரும் சத்தின் அளவு 17.4 கலோரி ஆகும். ஆகையால் சிறந்த மருத்துவ குணம் கொண்ட இளநீர் மனித உடல்நலத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இளநீரில் காணப்படும் முக்கிய சத்து சர்க்கரை சத்தாகும். இளநீரில் 5.5 விழுக்காடு சர்க்கரை சத்து அளவு உள்ளது. மற்றும் தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக்னீசீயம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இளநீரில் ஊட்டச்சத்துக்கள் பின்வருமாறு
  • இளங்காய்களில் நீர்;:
  • ஈரப்பதம்: 95.01, புரதம்: 0.13, கொழுப்பு: 0.12 மாவுப்பொருள்: 4.11, சாம்பல்: 0.63.
  • இளநீரின் பயன்கள்.
  • இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
  • இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
  • இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும்.
  • இளநீர் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
  • இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம்.
  • இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்ற உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.
  • இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.
  • இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
  • புகையிலை மற்றும் மது போன்றவைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல்படுகிறது.
  • மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் இளநீர் மட்டுமே அதிகமான பயன்களைத் தருகிறது.
  • இளநீர் மிகக் குறைந்த செலவில் அதிகப் பயன்களைத் தரவல்லது. எனவே தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம் என்றும் நலமாய் இருப்போம்.

அழகு வேண்டுமா? ஆரோக்கியம்...

யாராவது உங்கள் முகத்தைப் பார்த்து ஆஹா,.. என்ன மினுமினுப்பு
உங்கள் முகத்தில்? என்று ஆச்சரியப்பட்டால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதல் காரணம் உங்கள் முகம் நிஜமான ஆரோக்கிய மினுமினுப்பில் இருப்பது. இரண்டாவது காரணம் எண்ணெய் வழிவது. பிரச்சினை என்னவென்றால் நம் ஊரில் பெரும்பாலான முகத்தின் மினுமினுப்புக்கு எண்ணெய் வழிவதே காரணமாக இருக்கிறது. இது அழகுக்கும் கேடு. முகத்தின் ஆரோக்கியத்திற்கும் கேடு.
முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று எப்படி உறுதி செய்வது?
ரொம்பவும் எளிமையான வழி ஒன்று இருக்கிறது. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடையுங்கள். அதில் பசை இருந்தால் உங்கள் முகம் ஆயில் ஃபேஸ்! அவ்வளவுதான்.
ஏன் என் முகத்தில் மட்டும் ஆயில் வழிகிறது?
நீங்கள் இதற்கு உங்கள் பாட்டி, முப்பாட்டி என்றுதான் குறை சொல்ல வேண்டும். ஆம் இது மரபு வழியாகத்தான் வருகிறது என்கிறார்கள். இதனை மருத்துவர்கள் `செபோரியா' என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். நாம் ஆயில்முகம் என்கிறோம். இந்த நிலை பருவம் அடையும் வயதில் அதிகபட்சமாக இருக்கும். பின் 30 வயதுவரை படுத்தும்.
இதற்கு வேறு என்ன காரணம்?
இருக்கிறது. ஹார்மோன்கள். அதிகப்படியான ஆன்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் உற்பத்தி ஆகும்போது முகத்தில் இருக்கிற தோலின் செம்பஷியஸ் சுரப்பிகள் அதிகப்படியான ஆயிலை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதுதவிர, மோசமாக முகத்தைப் பராமரிப்பதும் ஒரு காரணம். இந்திய முகங்களை இது அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள். நம் குறைபட்ட உணவுப்பழக்கம் கூட ஒரு காரணம். கூடவே நம்மின் தப்புத்தப்பான முகப்பராமரிப்புப் பொருட்கள். தோலை அடைத்து மூச்சை முட்டும் அழகு சாதனங்கள்.
என்ன செய்வது? எப்படி ஆயில் முகத்தைத் தடுப்பது?
1. நிறைய தண்ணீர் குடியுங்கள்.
நிறைய தண்ணீர் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி ப்ளஸ் நான்கு மிளகு ப்ளஸ் ஒரு டீஸ்பூன் தேன் அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும்.
2. சரியான உணவு சாப்பிடுங்கள்
நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், காரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
3. ஆயில் அதிகரிப்பதை தடை செய்யும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்
முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும்பொழுது அதில் கிளைகாலிக் அமிலம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதிகமாக உருவாவதை தடுக்கக் கூடியவை.
உங்கள் கிளன்ஸர்களை வாங்கும்பொழுது அதனுள் ஹைட்ராக்ஸி அமிலம், சாலிசிலிக் அமிலம், பென்ஸைல் பெராக்ஸைட் போன்றவை இருக்கிறதா என்று கவனியுங்கள். இவை புடைத்து எழுகிற முகக் கட்டிகளை வேகமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை.
டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தை வறளவிட்டு சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும்.
4. சிகிச்சைகள்
அ. மூன்று முறை முகம் கழுவுங்கள்
வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகம் கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். அதே நேரத்தில் சருமப் பாதுகாப்பிற்கான லைப்பிடுகள் வெளியேறாது. முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள்.
ஆ. சோப் இல்லாத சோப் வாஷ் பயன்படுத்துங்கள்
இந்த வகையில் நிறைய மென்மையான முகம் கழுவிகள் கிடைக்கின்றன. ஜான்சன் அண்ட் ஜான்சன் க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பயன் தரும்.
இ. ஆன்டிபாக்டீரியல் க்ளன்சர்களைப் பயன்படுத்துங்கள்.
ஆயில் அதிகம் இருப்பதால் பாக்டீரிய தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவே இந்த வழி. செட்டாபில் அல்லது விச்சி கிளன்ஸர்களை பயன்படுத்திப் பாருங்கள்.
ஈ. ஃபேஸ்மாஸ்க் போடுங்கள்
களிமண் அடிப்படையில் செயல்படும் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழமாக சுத்தம் செய்யும். ஹிமாலயா பியூரிபையிங் மட் பேக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
உ. மாச்சுரைசரை கவனியுங்கள்
ஆயில் அதிகம் சுரப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது. லா ஓரல் பாரிஸ் பியூர் ஸோன் அன்டி ரிக்ரஸிங் மாச்சுரைசரைப் பயன்படுத்திப் பாருங்கள். பகல் நேரங்களில் ஜெல் போன்ற சன் ஸ்கிரீன்கள் உதவும். ஆலுவேரா கூட உதவும்.
5. சரியான மேக்-அப் போடுங்கள்
இதற்கு ஒருமுறை நீங்கள் நல்ல அழகு சிகிச்சை நிபுணரை அணுகி, உங்கள் முகத்தை பரிசோதித்து, பின் அவர் தரும் ஆலோசனைப்படி முகத்திற்கான மேக்கப் முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
6. தோல் நோய் மருத்துவ நிபுணரைச் சந்தியுங்கள்
தீர்க்கமுடியாத, அதிகப்படியான ஆயில் முகம் முழுக்க தொந்தரவுகளை ஏற்படுத்தும்போதும் உங்கள் சந்திப்பு ஒரு நல்ல தோல் நோய் மருத்துவரை நோக்கி இருக்கவேண்டும். ஓடிசி வகை மருந்துகள், க்ளைகாலிக் பீலிங் போன்ற சில சிகிச்சைகளை அவர் உங்கள் தேவைக்கு ஏற்ப பரிந்துரைக்கலாம்.
நன்றி: kumudam.com

 

கண்ணே, நலமா... 64! நவீன கண் மருத்துவம்

கண்ணே, நலமா... 64!


பத்து வருடங்களுக்கு முன்னால், குணப்படுத்தவே முடியாது என்று கருதப்பட்ட கண் நோய்கள் எல்லாம் இன்றைக்கு அதிநவீன சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடிகிறது. இருந்தாலும், மக்கள் மனத்தில் சில தவறான எண்ணங்களும், சந்தேகங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை நீக்கவும், நவீன கண் மருத்துவ சாத்தியக்கூறுகளை விளக்கவும் இந்தக் கையேட்டினை வாசகருக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்."



--------------------------------------------------------------------------------

காடராக்ட் என்றால் என்ன?

நம் நாட்டில் பார்வைக் குறைவுக்கு மிக முக்கியக் காரணம் காடராக்ட் அல்லது கண்புரை அல்லது படலம்.

நம் எல்லோர் கண்களிலும் இயற்கையாகவே லென்ஸ் இருக்கிறது. அதன் வழியாக ஒளிக்கதிர், பின்னாலுள்ள விழித்திரையில் விழும்போது, நம்மால் பார்க்க முடிகிறது. இந்த லென்ஸ் வெளுத்துப்போய், வெளிச்சத்தைக் கண்ணுக்குள் புகாமல் தடுக்கும்போது, அதைக் கண்புரை, படலம் அல்லது காடராக்ட் என்கிறோம்.



--------------------------------------------------------------------------------

காடராக்ட் வந்திருக்கிறது என்று எப்படி அறிவது?

கண் பார்வை மங்க ஆரம்பித்தால், அது புரை அல்லது படலத்தால் இருக்கலாம். இதைத் தவிர, எதிரே தெரியும் ஒளியைச் சுற்றி வானவில் மாதிரி வர்ணங்கள் தெரியும். கண்கள் கூசும். இரவுப் பார்வை குறைபாட்டாலும் இது உண்டாகும். இதுவும் புரை அல்லது படலத்தால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியே.



--------------------------------------------------------------------------------

இதற்கு என்ன மருத்துவச் சிகிச்சை?

கண் புரையை அகற்ற (அதாவது காட ராக்டை குணப்படுத்த) அறுவை சிகிச்சை ஒன்றே தீர்மானமான வழி. பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னும் மிகச்சரியான மருந்துகள் காடராக்ட் வராமல் தடுக்கவோ, குணப் படுத்தவோ கண்டுபிடிக்கப்படவில்லை. காடராக்ட் என்பது, வயதாவதன் அறிகுறிகளில் ஒன்று; தலைமுடி நரைப்பது போல. பார்வைக் குறைபாட்டை அது உண்டாக்கும் போது, அதை நீக்கத்தான் வேண்டும். செயற்கை லென்ஸைப் பொருத்தி, சிகிச்சை அளித்துப் பார்வையைப் பெற முடியும்.



--------------------------------------------------------------------------------

புரை முற்றிய பிறகுதான் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமா?

அல்ல. இது ஒரு தவறான கருத்து எப்போது பார்வைக் குறைபாடு அறியப்பட்டுவிட்டதோ, எப்போது நம் அன்றாட வேலைகளில் ஒரு தடை ஏற்படுகிறதோ, அப்போதே அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

முற்றிப் போனால் கண்ணுக்கும் ஆபத்து. அறுவைச் சிகிச்சையும் கடினமாகி விடும்.



--------------------------------------------------------------------------------

அறுவைச் சிகிச்சைக்குப் பின் சோடா புட்டி கண்ணாடி அணிய வேண்டியிருக்குமா?

இப்போது அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது! ஒவ்வொரு வருக்கும் ஏற்ற மாதிரி, மிகத் துல்லியமாக பவர் கணக்கிடப்பட்டு, கண்ணுக்குத் தகுந்த லென்ஸ் பொருத்துவதால், கனமான கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே இல்லை.



--------------------------------------------------------------------------------

அப்படியானால் கண்ணாடி போடுவதை முற்றிலும் தவிர்க்க முடியுமா?

நிச்சயம் தவிர்க்க முடியும். சாதாரண மோனோஃபோகல் லென்ஸ் பொருத்திய பிறகு படிக்கவும், எழுதவும் கண்ணாடி தேவைப்படும். நிறைய சிலிண்டர் பவர் இருந்தாலும் தூரப் பார்வைக்கு இலேசான கண்ணாடி தேவைப்படலாம். இப்போது அதையும் தவிர்க்கிற மாதிரி மல்ட்டிஃபோகல் லென்ஸ் வந்து விட்டது. இது நவீன கண்ணாடி போல, பக்க-நடுத்தர-தூரப் பார்வை என எல்லாவற்றுக்கும் பயன்படும். படிப்பதற்கும் கண்ணாடி தேவையில்லை. இதே போல் சிலிண்டர் பவரைத் தவிர்க்க, டாரிக் லென்ஸ் ( Toric Lens ) இப்போது கிடைக்கிறது.



--------------------------------------------------------------------------------

மல்ட்டிஃபோகல் மற்றும் டாரிக் லென்ஸ் தவிர லென்ஸ்களில் வேறு என்ன முன்னேற்றம்?

ஆஸ்ஃபெரிக் ( aspheric ) இன்ட்ரா ஆக்யுலர் லென்ஸைப் பொருத்தலாம். இதைப் பொருத்திவிட்டால், பார்வைத்திறன் மிகச்சிறப்பாக இருக்கும். எண்பது வயதுக்காரரின் கண் பார்வை கூட, இருபது வயதுக்காரரின் பார்வையைப் போல அத்தனைத் தெளிவாக இருக்கும்.



--------------------------------------------------------------------------------

காடராக்ட் அறுவைச் சிகிச்சையிலேயே நவீன சிகிச்சை முறை என்ன?

ஃபேகோ எமல்ஸிஃபிகேஷன் என்று அல்ட்ரா சவுண்ட் முறையில், கண் பார்வையை மறைக்கும் புரை அல்லது படலத்தை, சிறு துவாரம் வழியாகக் கரைத்து விட்டு, அதே துவாரம் வழியாகவே லென்ஸைக் கண்ணுக்குள், தையல் இல்லாமல் பொருத்துவது தான் இன்று நவீன காடராக்ட் சிகிச்சை முறை.



--------------------------------------------------------------------------------

மிகவும் வலிக்குமோ?

இப்போது ஓர் ஊசி கூட இல்லாமல் புரை அறுவைச் சிகிச்சை செய்து வருகிறோம். சொட்டு மருந்து விட்டு, எட்டு முதல் பத்து நிமிடங்களில் முழு அறுவைச் சிகிச்சையும் முடிந்துவிடுகிறது. கண்களுக்குக் கட்டுப் போட வேண்டிய அவசியம் கூடக் கிடையாது!



--------------------------------------------------------------------------------

கட்டுப்போட வேண்டாம் - ஆனால் கட்டுப்பாடு ஏதும் உண்டா?

எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது. சாதாரணமாக உணவு உட்கொண்டுவிட்டு, குளித்துவிட்டு, மருத்துவமனைக்குப் போனால், அன்றே சிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம். உணவு, டீவி பார்ப்பது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது, வெளியூர்ப் பயணம் என்று எதிலுமே கட்டுப்பாடு கிடையாது. ஆறு வாரங்களுக்குக் கண்ணில் சொட்டு மருந்து விட வேண்டும். இரண்டு வாரங்களுக்குத் தண்ணீர் கண்களில் படாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்தே பழையபடி வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடலாம்.



--------------------------------------------------------------------------------

இரண்டு கண்களுக்கும் ஒரே நாளில் ஆபரேஷன் செய்யலாமா?

செய்யலாம்.என்றாலும், முதலில் ஒரு கண்ணைச் சீராக்கிய பிறகு சற்று இடைவெளி கொடுத்து இரண்டாவது கண்ணை ஆபரேட் செய்வது நலம். பொதுவாக, ஒரு வார இடைவெளி போது மானது.



--------------------------------------------------------------------------------

காடராக்ட் அறுவைச் சிகிச்சையில் என்ன தவறு நேரலாம்?

பத்து நிமிடங்களில் அறுவைச்சிகிச்சை முடிந்து விடுகிறது என்பதற்காக, காடராக்ட் சிகிச்சையைக் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது.

எல்லா முன்னெச்சரிக்கைகளையும் மேற் கொண்டு எல்லா முன்னேற்பாடுகளையும் முறையாகச் செய்து முடித்து, தேர்ந்த கண் மருத்துவரின் உதவியுடன் நவீன முறை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.அப்படிச் செய்யாவிட்டால், பார்வை போவது உட்பட, பல சிக்கல்கள் ஏற்படக்கூடும்.



--------------------------------------------------------------------------------

மனைவி கண்ணாடி அணிகிறாள். மகனும் கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டி வருமா?
ஹெரிடிடரியாக - அதாவது பரம் பரையாக - இப்படிப்பட்ட ரிஃப்ராக்டிவ் எர்ரர் எனும் பார்வைக் குறைபாடு இருந் தால், அதைத் தவிர்க்க முடியாது. அதற்காக, அந்தக் குடும்பத்தில் குழந்தைகள் எல்லோருக்குமே அப்படி வரும் என்று சொல்லவும் முடியாது. ஆனால் இப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் பரிசோதனை மிகவும் அவசியம். கண்டு கொள்ளாமல் மட்டும் இருந்துவிடக் கூடாது. கண்டுபிடித்து விட்டால் சரிசெய்து விடலாம்.



--------------------------------------------------------------------------------

ரிஃப்ராக்டிவ் எர்ரர் என்றால் என்ன?

கிட்டப் பார்வை (மையோபியா) அதாவது மைனஸ் பவர்; தூரப் பார்வை (ஹைபரோபியா)அதாவது ப்ளஸ் பவர் இருந்தால் அதை ரிஃப்ராக்டிவ் எர்ரர் என்பார்கள். கிட்டப் பார்வையில் கண்ணின் அளவு பெரிதாக இருக்கும்; தூரப் பார்வையில் கண்ணின் அளவு சிறியதாக இருக்கும். இவை இரண்டும் அல்லாமல், கருவிழியின் வளைவான அமைப்பில், மாறுபாடு இருந்தால் அதன் காரணமாக சிலின்ட்ரிகல் பவர் ஏற்படுகிறது. இதை அஸ்டிக்மாடிஸம் என்பார்கள். இவை எல்லாவற்றுக்குமே மைனஸ் அல்லது ப்ளஸ் கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்ஸ்களோ அணியலாம். அல்லது லாசிக் சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.



--------------------------------------------------------------------------------

நிறைய காரட், கீரை, ஜூஸ் குடித்தால், பார்வைக்குறைபாட்டைத் தவிர்த்து விட முடியுமா?

இது தவறான எண்ணம். காரட் ஜூஸ் குடிப்பது வைட்டமின் அளவில் நல்லது. ஆனால் அதற்கும் ரிஃப்ராக்டிவ் எர்ரர் எனப்படும் பார்வைக் குறைபாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது ஒரு நோயும் அல்ல. வைட்டமின் குறைபாட்டால் மட்டுமே வருவதுமல்ல. முன் குறிப்பிட்ட மாதிரி பெற்றோர் வழியாக வருவதும் உண்டு. டீவி திரையைப் பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் கேம்ஸ் பார்ப்பதாலும் மட்டுமே பார்வைக் குறைபாடு வருவதில்லை.



--------------------------------------------------------------------------------

வெள்ளெழுத்துக்கும் இதுவேதான் காரணமா?

நாற்பது வயதுக்கு மேல் பார்வைக் கோளாறு ஏற்படும் போது, அதை சாளேசுவரம் அல்லது வெள்ளெழுத்து என்கிறோம். இது தூரப் பார்வைக் குறைவும் அல்ல. கிட்டப் பார்வை குறைவும் அல்ல. கண்தசைகள் பலவீனம் அடைவதால், இயற்கையாகவே எல்லோருக்கும் உண்டாவதுதான்.



--------------------------------------------------------------------------------

நாற்பத்தைந்து வயதாகும் ஒருவர், படிப்பதற்குக் கண்ணாடி போட்டிருக்கிறார். ஆனால் கம்ப்யூட்டரில் வேலை..

படிக்கிற கண்ணாடி போட்டுக் கொண்டால் மட்டுமே போதுமான கரெக்ஷன் செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது கம்ப்யூட்டர் பணிக்குத் தொடர்பு இல்லாதது. கம்ப்யூட்டர் திரை அருகிலும் இல்லை, தூரத்திலும் இல்லை. அதனால், அணிந்திருக்கும் படிப்பதற்கான கண்ணாடி மட்டுமே பயன்படாது. கிட்டப் பார்வை- தூரப் பார்வை இரண்டுக்குமே இடைபட்ட குறைபாட்டுக்கு பிராக்ரஸிவ் கண்ணாடிதான் சிறந்தத் தேர்வு.



--------------------------------------------------------------------------------

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?

நாம் அச்சில் படிப்பது போன்ற எழுத்துக்கள் அல்ல, கம்ப்யூட்டர் திரையில் பார்ப்பது. கம்ப்யூட்டர் எழுத்து, பல புள்ளிகள் சேர்ந்து உருவான எழுத்து. இதை ‘பிக்ஸெல்’ என்பார்கள். இதைப்பார்த்துக் கொண்டே இருக்கும் போது அதிலிருந்து பார்வை விலகி ( driftஆகி ) விடும். மறுபடி மறுபடி ஃபோகஸ் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும்போது பாதிப்பு ஏற்படுவதால் வலி உண்டாகிறது.



--------------------------------------------------------------------------------

பையன் கம்ப்யூட்டர் கேம்ஸ் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, அரை மணி கழித்து, தலை வலிக்கிறது என்கிறான். கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் இப்படி தலைவலி வருகிறதா?

ஓரளவுக்கு இது கம்ப்யூட்டர் திரையின் ஒளியால் ஏற்படும் பாதிப்புத்தான். ஆனால், நவீன எல்சிடி திரையுள்ள கம்ப்யூட்டரில், இந்த ஒளியின் அதீத பாதிப்பு வரும் வாய்ப்பு குறைவு. கண்ணில் பவர் காரணமாகவோ, கண் தசை பலவீனத்தின் காரணமாகவோ இது ஏற்படலாம். அப்போதும் இம்மாதிரி அறிகுறி தெரியலாம். ஆனால் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க, செக்-அப் செய்து கொள்வது நல்லது.



--------------------------------------------------------------------------------

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் வந்தால் எப்படி குணப்படுத்துவது?

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களை, அந்தத் திரையின் அதீத ஒளி (க்ளேர்) பாதிக்கும். இடையிடையே சிறு இடை வெளி கொடுத்துப் பணியைச் செய்யலாம். தொடர்ந்து 8 முதல் 10 மணி நேரம் இடைவிடாமல் கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். மேலும், சரியான தூரத்திலும், சரியான நிலையிலும் அமர்ந்து கொள்ள வேண்டும். (படத்தில் காட்டியபடி) இப்போது கண்களுக்குத் தேவையான லூப்ரிகன்ட் ட்ராப்ஸ் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம்.



--------------------------------------------------------------------------------

தலைவலி என்று சிலர் கண் பரிசோதனை செய்து கொள்கிறார்களே?

எல்லா தலைவலிகளுக்குமே காரணம் கண் என்று எண்ணிவிடக் கூடாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முன்பு கூறியது போல, கண்ணின் தசை பலம் குறைந்து போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். கண்ணில் பவர் குறைபாடு இருந்தால் கண்ணாடி அவசியம். எனவே, கண்களைப் பரிசோதித்தபின், காரணம் அறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.



--------------------------------------------------------------------------------

ஒரு பெண்ணுக்கு 14 வயதாகிறது. தடிமனான கண்ணாடி அணிந்திருக்கிறாள். அது வேண்டாம் என்கிறாள். என்ன செய்வது?

லேசர் சிகிச்சை மூலம் பார்வையைத் திருத்த, 18 வயதாக வேண்டும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான். ஏனெ னில் 18 வயது வரை கண்கள் வளர்ந்து பவர் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்னோர் எளிய வழி கான்டாக்ட் லென்ஸ் அணிவது. இப்போது மிக நவீன கான்டாக்ட் லென்ஸ்கள் கிடைக்கின்றன. வருடத்துக்கு ஒருமுறை அணிவது, மாதத்துக்கு ஒரு முறை அணிவது, வாரத்துக்கு ஒருமுறை அணிவது, ஏன்-தினசரி ஒருமுறை அணிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு கான்டாக்ட் லென்ஸ்கள் வந்துவிட்டன. வசதிக்கு ஏற்ப அணியலாம்.



--------------------------------------------------------------------------------

க்ளகோமா என்றால் என்ன?

கண்ணின் முன் பாகம் அக்வஸ் எனும் நிறமற்ற திரவத்தால் நிரம்பியுள்ளது. இது கண்ணுக்குள் இருக்கிற பாப்பா மற்றும் லென்சுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. இது கண்ணுக்குள்ளேயே உற்பத்தியாகி, சல்லடை போன்ற வழி மூலம் வெளி யேறுகிறது. இந்த திரவம் உற்பத்தி ஆகிற அளவும், வெளியேறும் அளவும் சமமாக இருந்தால்தான் கண் அழுத்தம் (பிரஷர்) சரியான அளவில் இருக்கும்.



--------------------------------------------------------------------------------

அந்த அழுத்தம் அதிகமானால்?

அழுத்தம் அதிகமா வதால் வருவதுதான் க்ளகோமா. கண்ணில் அந்தத் திரவத்தின் அழுத்தம் அதிகமாகி, கண்ணுக்குள்ளே இருக்கும் நரம்பை (ஆப்டிக்நெர்வ்) பாதிக்கும் போது க்ளகோமா உண்டாகிறது. க்ளகோமாவால் ஏற்படும் பார்வை இழப்பு நிரந்தரமானது. அதுதான் இந்த நோயிலுள்ள அபாயம். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.



--------------------------------------------------------------------------------

க்ளகோமா எந்த வயதிலும் வருமா?

எந்த வயதிலும் வரலாம் என்பது மட்டுமல்ல. பிறவியிலும் கூட வரலாம். க்ளகோமா நடுவயதிலும் அதற்குப் பின்னரும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். பாதுகாப்பாக இருக்க, 40 வயதுக்கு மேல் ஆனால் வருடத்துக்கு ஒருமுறை கண் அழுத்தத்தை (பிரஷர்) செக்-அப் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான் கண்டுபிடித்த நிலையிலேயே தடுத்து நிறுத்த முடியும்.



--------------------------------------------------------------------------------

யாருக்கெல்லாம் க்ளகோமா வர வாய்ப்பு அதிகம்?

ஸ்டீராய்ட்ஸ் மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு. டயபடீஸ் நோய் இருப்பவர் களுக்கு. அதிகமான மைனஸ் பவர் உள்ளவர்களுக்கு. குடும்பத்தில் பரம்பரையாக க்ளகோமா இருப்பவர்களுக்கு. இவர்கள் கட்டாயம் வருடம்தோறும் கண் அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கண்ணில் அடிபட்டு, நீர் போகும் பாதையில் அடைப்பு ஏற்பட்டாலும் க்ளகோமா வரலாம்.



--------------------------------------------------------------------------------

க்ளகோமாவால் முழுப் பார்வையையும் இழந்து விடும் அபாயம் உண்டா?

கவனிக்காமல் விட்டுவிட்டால், நிச்சயம் உண்டு. இன்ட்ரா ஆக்யுலர் பிரஷர் அதிகமானால் இது ஏற்படுகிறது. அப்போது கண் நரம்பு செயலிழந்து போய், முழுப்பார்வை இழப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான் இதை ‘சைலன்ட் விஷன் ஸ்டீலர்’ என்கிறார்கள். முன்னெச்சரிக்கையாக இருந்தால்தான் அதிலிருந்து தப்பிக்க முடியும்.



--------------------------------------------------------------------------------

க்ளகோமா வந்தவர்கள் எப்போது செக்-அப் செய்து கொள்ள வேண்டும்?

4-5 மாதங்களுக்கு ஒருமுறை. அதாவது, டயபடீஸ் வந்தவர்கள் மாதிரி, அடிக்கடி செக்-அப் செய்து கொண்டாக வேண்டும். சொட்டு மருந்து மட்டுமே போதாது. அதில் பலன் கிடைக்காதபோது, அழுத்தம் கட்டுப்படாவிட்டால், அறுவைச் சிகிச்சையோ, லேசர் சிகிச்சையோ தேவைப்படும்.



--------------------------------------------------------------------------------

பிறந்த குழந்தைக்கு க்ளகோமா வருமா?

வர வாய்ப்பு இருக்கிறது. கருவிழி பெரிதாக இருந்து கண்ணில் நீர் வரும். கண் கூச்சம் அதிகமாக இருக்கும். இவை க்ளகோமாவின் அறிகுறிகள். கண் டாக்டரிடம் காண்பித்து கண்ணில் அழுத்தம் (பிரஷர்) எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.



--------------------------------------------------------------------------------

குழந்தைக்கு மாறுகண் இருந்தால் அதிர்ஷ்டம் என்று சிலர் நம்புகிறார்களே?

தவறு. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்து பார்வையைச் சீர்செய்ய வேண்டும். அழகுக்காக மட்டுமல்லாமல், இரு கண்களிலும் சமமான பார்வை இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சிகிச்சை அவசியம்.



--------------------------------------------------------------------------------

டயபடீஸ் வந்தால் கண்கள் பாதிக்கப்படுமா? எந்தவித அறிகுறியும் தெரியாதா?

எத்தனை வருடங்களாக சர்க்கரை நோய் இருந்து வந்திருக்கிறது என்று தெரிய வேண்டும். டயபடீஸ் பாதிப்பு பல வருடங்கள் இருந்தால் அதனால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். இருபது வருடமாக என்றால், நிச்சயமாகப் பாதிப்பு இருக்கும். டயபடீஸ் வந்து கண்கள் பாதிக்கப்படுவதை, டயபடிக் ரெடினோபதி என்பார்கள். அதற்கு டயபடீஸ் மருத்துவரை மட்டுமே அணுகினால் போதாது. விழித்துறைப் பிரிவில் தேர்ந்த கண் மருத்துவரையும் வருடத்துக்கு ஒருதடவையாவது பார்க்க வேண்டும்.



--------------------------------------------------------------------------------

கண்ணில் ரெட்டினா பாதிக்கப்பட்டிருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?

மேற்படி கண் மருத்துவர் பரிசோதனை செய்யும்போது கண்டறிந்து சொல்லி விடுவார். அந்தச் சில பரிசோதனைகளில் ஆஞ்சியோகிராமும் அடங்கும். அடுத்ததாக OCT மூலம், எந்த அளவுக்குக் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அறியலாம். பாதிப்புக் குறைவாக இருந்தால் லேசரில் சரிசெய்யலாம். அதிகமாக இருந்தால் அறுவைச் சிகிச்சை. இதை விட்ரக்டமி என்பார்கள்.



--------------------------------------------------------------------------------

டயபடீஸ் வந்து பாதிக்கப்பட்ட அல்லது ரெடினல் டிடாச்மென்ட் ஆனதை சரிசெய்ய முடியுமா?

முடியும். இது மிக நவீன தொழில்நுட்பத்துடன் செய்யப்படும் சிகிச்சை. இதை 23-G விட்ரக்டமி என்பார்கள். இதில் தையல்களே இருக்காது. நேரமும் குறைவாகவே ஆகும். விரைவாகச் செய்துவிடலாம். அதனால் அறுவைச் சிகிச்சையின் பலன் இன்னும் நன்றாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.



--------------------------------------------------------------------------------

அதிக ரத்த அழுத்தம் (ஹை பிளட் பிரஷர்) கூடக் கண்ணைப் பாதிக்குமா?

ஆம். கண் நரம்பைப் பாதிக்கும். ரத்தக் கசிவு ஏற்பட்டு சீரியஸ் ஆனால், கண் பார்வை போய்விடும் அபாயமும் இருக்கிறது. கண்ணிலுள்ள ரத்தநாளங்கள் மூடிக்கொள்ளும் அபாயம் அதிகமாகிறது. எனவே உயர் ரத்த அழுத்த நோயாளிகள் முறையாக அவ்வப்போது செக்-அப் செய்து கொள்வது அவசியம்.



--------------------------------------------------------------------------------

வயதாவதன் காரணமாக கண் விழித்திரை பாதிக்கப்படுமா?

வயதாவதால் விழித்திரையில் பார்வைக்கு மிக முக்கியமான மேக்குலா என்ற பகுதியில் சில பாதிப்புகள் ஏற்படலாம். இதை Age Related Macular Degeneration ( ARMD ) என்பார்கள். இது மேக்குலாவில் உள்ள செல்கள் வளர்ச்சி அடையாமல் உயிரிழந்து போகிற போது உண்டாகிறது. 60-70 வயதுகளில் மேக்குலா செல்கள் முழு வளர்ச்சி அடையும் முன்பே உயிரிழப்பதும், புது ரத்தக் குழாய்கள் வழியே ரத்தமோ, திரவமோ கசிவதும் சற்று சீரியஸான பிரச்னைதான்.

ஃபோட்டோ கோயாகுலேஷன் மூலம், விழித்திரையில் உருவாகும் புதிய ரத்தக் குழாய்களை அழிக்க அல்லது செயல் இழக்கச் செய்யலாம். இதற்கும் கண்ணுக்குள் ஊசி மருந்து செலுத்தி குணப்படுத்தலாம்.



--------------------------------------------------------------------------------

கண் பார்வையின் தரத்தை உயர்த்த முடியுமா?

முடியும். மையோபியா (கிட்டப் பார்வை), ஹைபரோபியா (தூரப் பார்வை) அஸ்டிக்மாடி ஸம் (கோளவடிவக் கருவிழி) ஆகிய குறைபாடு களைப் போக்க, லாசிக் சையாப்டிக்ஸ் முறை சிகிச்சை இருக்கிறது. லாசிக் முறையில் மைனஸ் 2 முதல் மைனஸ் 12 வரையும், +1 முதல் +5 வரையும், அஸ்டிக்மாடிஸ கோளாறில் மைனஸ் 5 முதல் + 8 வரை சிலின்ட்ரிகல் பவரையும் சரிசெய்து விடலாம். இந்த மைனஸ், ப்ளஸ் குறைபாடுகள் தவிர, நம் கண்களில் ‘ஹையர் ஆர்டர் அபரேஷன்’ இருக்கும்பட்சத்தில், ஸையாப்டிக்ஸ் பயன்படுத்தி இந்த ‘ஹையர் ஆர்டர் அபரேஷனை’யும் போக்கிவிட முடியும். இதனால் மிக உயர்தரமான பார்வை கிடைக்கும்.



--------------------------------------------------------------------------------

லாசிக் சிகிச்சை பாதுகாப்பானதா?

லாசிக் சிகிச்சை மிகவும் துல்லியமான, பாதுகாப்பான சிகிச்சை. கருவிழியின் தடிமனைப் பரிசோதித்து அறிந்து ஆப்ஸ்கான் டோபோகிராஃபியின் மூலம் கருவிழியின் மிகச்சரியான அளவைப் படம் எடுத்து, இந்தச் சிகிச்சைக்கு ஒரு நபர் ஏற்றவர்தானா என்பதை நிச்சயிக்க முடிகிறது. அப்படி அந்த நபர் தகுதியானவர் இல்லை என்றால், அவரை சிகிச்சைக்கு உட்படுத்துவதில்லை.



--------------------------------------------------------------------------------

ஒவ்வொரு நோயாளியின் தேவைக்குத் தகுந்த மாதிரி இது உதவுமா?

இன்ட்ராலேஸ் முறையில் அதுதான் சிறப்பு. கருவிழியில் உருவாகும் மூடியின் குறுக்களவு, ஆழம், இணைப்புப் பகுதி, அகலம் முதலியவை, சிகிச்சை பெறுபவரின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. அதாவது ‘கஸ்டமைஸ்ட் ட்ரீட்மென்ட்’ என்று இதைச் சொல்லலாம்.



--------------------------------------------------------------------------------

இந்த லாசிக் சிகிச்சையிலும் முன்னேற்றமடைந்த நிலை இருக்கிறதா?

அதுதான் இன்ட்ராலேஸ் முறை சிகிச்சை. முதல் லாசிக் சிகிச்சை முறையில் திரை போன்ற மூடியை ( flap ) உருவாக்குகிறோம்.

இரண்டாவது நவீன முறையில் லேசர் உதவியுடன் மூடியை ( flap ) உண்டாக்குவதால், சிகிச்சைக்குப் பின்னர் அதை மீண்டும் பொருத்துவது இயல்பாக அமைகிறது. அதனால் இது இன்னும் சிறப்பான சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது.



--------------------------------------------------------------------------------

IPL தெரியும். ICL என்கிறார்களே, அதென்ன?

ICL என்பது லென்ஸ்தான். கருவிழி தடிமன் போதுமான அளவு இல்லாமல் அல் லது பவர் அதிகம் இருந்து விட்டால், லாசிக் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்காது. அப்போது அதிக பவர் இருப்பவர்களுக்கு ICL என்ற செயற்கை லென்சை கண்ணுக்குள் நிரந்தரமாகப் பொருத்தி விடுகிறோம். இதனால் அதிகபட்சபவர் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்க முடிகிறது.



--------------------------------------------------------------------------------

கண்ணில் கண்ணீர் எப்போதும் இருந்துகொண்டே இருக்குமா?

ஆம். கண்ணுக்குள் நீர் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும். இது வறண்டு போய் ட்ரை ஆகிவிடும் போதுதான் பிரச்னை. அதாவது, சீக்கிரம் காற்றில் கரைந்து போகிற போது, கண் வறட்சி ஏற்படுகிறது. கண் இமையை சாதாரணமாக மூடித் திறக்காமல் இருந்தால் கண் வறட்சி (ட்ரை ஐஸ்) ஏற்படும். மின்விசிறிக்குக் கீழே நேரடியாகத் தொடர்ந்து காற்றுப் படுகிற மாதிரி அமர்ந்திருந்தாலும் கண் வறட்சி ஏற்படலாம்.



--------------------------------------------------------------------------------

கண்ணுக்குள் சதை வளர்ந்து உறுத்துகிறது என்பார்களே, அது என்ன?

அதை டெரிஜியம் ( Pterygium ) என்பார்கள். இதை அறுவைச் சிகிச்சை மூலம், வளர்ந்து கண்ணை உறுத்தும் சதையை நீக்கி, நன்றாக இருக்கிற சதைப் பகுதியை எடுத்து அந்த இடத்தில் பொருத்திவிடுவோம். இதை ‘கஞ்சக்டைவல் ஆட்டோ கிராஃப்டிங்’ என்பார்கள்.



--------------------------------------------------------------------------------

கண்ணில் தூசி விழுந்தால், கண்ணைப் போட்டுத் தேய்க்கலாமா?

அப்படித் தேய்த்தால் கண் புண்ணாகி விடும். அந்தப் புண்ணை சிகிச்சை செய்து குணப்படுத்தாவிட்டால், கருவிழியில் வெள்ளைத் தழும்பு ஏற்பட்டு, பார்வை நிரந்தரமாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது. கண்ணில் நிறையத் தண்ணீர் விட்டுக் கழுவி, தூசியை எடுப்பதுதான் நல்லது. இதற்குப் பிறகும் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தால் கண் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.



--------------------------------------------------------------------------------

கண்ணில் குச்சியோ, கூரான பொருளோ குத்திவிட்டால்?

அப்படிக் காயம் ஏற்பட்டுவிட்டால், ஐஸ்க்ரீம் கப் போல ஒன்றை எடுத்துக் கண்ணைப் பாதுகாப்பாக மூடிவிட்டு கண் மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் இன்ஃபெக்ஷன் உண்டாகி கண் பாதிக்கப்படும். கண்ணில் ஆஸிட், அல்கலீன் விழுந்தாலும், உடனே நிறையத் தண்ணீர் விட்டுக் கழுவி, உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.



--------------------------------------------------------------------------------

கண்ணில் கட்டி வந்துவிட்டது என்றால்?

தாய்ப்பால் ஊற்றுவது, நாமக்கட்டியைத் தேய்த்துப் பூசுவது கூடவே கூடாது. அதே போல, தூசி விழுந்து விட்டால் நாக்கால் எடுப்பது, காகித நுனியால் எடுப்பது எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். அவற்றால் கருவிழி பாதிக்கப்பட்டு, அல்ஸர் வரும் அபாயம் இருக்கிறது. அதனால், மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.



--------------------------------------------------------------------------------

கருவிழியில் தழும்பு ஏற்பட்டால், அதற்குச் சிகிச்சை என்ன?

கார்னியல் ட்ரான்ஸ்பிளான் டேஷன் என்ற சிகிச்சை மூலம், இறந்தவர்களின் கருவிழியை தானமாகப் பெற்று, மாற்று அறுவைச் சிகிச்சை செய்து பார்வை பெறலாம். மாற்று அறுவைச் சிகிச்சை என்பது, கருவிழியை மட்டுமே மாற்றிப் பொருத்துவதுதான். முழுக் கண்ணையும் அல்ல.



--------------------------------------------------------------------------------

கருவிழி பார்வையற்றுப் போக வேறு என்ன காரணம்?

போதுமான சத்துள்ள உணவு கிடைக்காத நிலை. அதை ‘மால் நியூட்ரிஷன்’ என்பார்கள். தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து கிடைக்காத போதும் அப்படி ஏற்படும்.



--------------------------------------------------------------------------------

கண்தானம் செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

மரணம் நிகழ்ந்தபின், ஒரு பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, இறந்தவரின் நெற்றியில் வைப்பது நல்லது. மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மூடிய கண்கள் மேல், ஈரமான துணி அல்லது பஞ்சை வைத்துவிட வேண்டும்.



--------------------------------------------------------------------------------

எப்போது கண் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்?

இறந்தவரின் கண்களின் கருவிழியை ஆறு மணி நேரத்துக்குள் கண் மருத்துவர் எடுத்துவிட வேண்டும். தானம் செய்யும் எண்ணம் இருந்தால், அருகிலுள்ள கண் மருத்துவமனையில் தெரிவித்து விட வேண்டும். கண் மருத்துவர் வந்து கார்னியாவை எடுத்துப் பத்திரப்படுத்தி விட்டு, முன்பு இருந்த மாதிரியே கண்களை மூடிவிடுவார். எடுத்த சுவடே தெரியாது. ஒருவர் அளிக்கும் தானம் இருவருக்குப் பார்வையைத் தருகிறது.



--------------------------------------------------------------------------------

கண்தானம் யார் வேண்டுமானாலும் செய்யலாமா?

ஒரு வயதுக் குழந்தை முதல் யார் வேண்டு மானாலும் கண் தானம் செய்யலாம். ஆனால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பரவும் வகை கான்சர் நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மூளைக் காய்ச்சல் வந்தவர்கள், விஷம் உட்கொண்டு இறந்தவர்கள் - இவர்கள் கண்களைத் தானமாக ஏற்பதில்லை.

உலகிலுள்ள பார்வையற்றவர்களில், கிட்டத் தட்ட நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் இருக்கிறார்கள். எனவே கண் தானம் பரவ வேண்டும்.



--------------------------------------------------------------------------------

டயபடீஸ் வந்தவர்கள் கண்தானம் செய்யலாமா?

டயபடீஸ் வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கண்ணாடி போட்டவர்கள் - இவர்கள் எல்லாருமே கண் தானம் செய்யலாம்.

ஒரு நம்பிக்கையூட்டும், மகிழ்ச்சியான செய்தி: இந்தியாவிலேயே தமிழ்நாட் டில்தான் கண்தான விழிப்பு உணர்ச்சி அதிகம்!



--------------------------------------------------------------------------------

கண்களில் அதிகம் நீர் தேங்கி, வடியாமல் இருந்தால் என்ன செய்வது?

சாதாரணமாகக் கண்ணிலுள்ள நீர் நாசி வழியேதான் வெளியேறும். அப்படி அந்தப் பாதை அடைபட்டிருக்கும்போது விழியின் நுனியில் ஒரு துவாரம் செய்து, தனி வழி ஒன்று ஏற்படுத்தி, நாசி வழியாகவே அந்த நீர் வெளியேற வழிசெய்ய முடியும். இது அறுவைச் சிகிச்சை மூலமாகச் செய்யப்படுகிறது. இதை DCR என்பார்கள். இப்போது இதை லேசர் மூலம் செய்வதால், பத்து-பதினைந்து நிமிடங்களில், இரத்தக்கசிவு இல்லாமல், வலி ஏதும் இல்லாமல், தழும்பு ஏதும் இல்லாமல் செய்ய முடியும்.



--------------------------------------------------------------------------------

சிலருக்கு இமை பாதியாகவோ, முழுமையாகவோ மூடியிருக்கும். இதற்குச் சிகிச்சை இருக்கிறதா?

சிறு வயதாக இருப்பவர்களுக்கு இந்தச் சிகிச்சை மிக அவசியம். ஏனென்றால் அவர்கள் பார்வையை இது பாதிக்கும். இதைச் சரிசெய்ய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம். அதன் பிறகு பார்வையும் முழுமையாகி விடும். வயதானவர்களுக்கும் அவர்களின் பாதிப்பு நிலையைப் பொறுத்து அறுவைச் சிகிச்சை செய்யலாம்.



--------------------------------------------------------------------------------

சிலருக்கு இமை ரோமம் வளர்ந்து வெளியே நீட்டிக் கொண்டோ, உள்ளுக்குள் வளைந்து கொண்டோ கண்ணை உறுத்தும்...

இதை Ectropion (வெளியே நீட்டிக் கொண் டிருப்பது), Entropion (உள்ளே வளைந்திருப்பது) என்பார்கள். இது கண் பார்வையை நிச்சயம் பாதிக்கும். பாதிப்பைத் தவிர கண் உறுத்தலும், கண்ணிலிருந்து நீர் வடிதலும் ஏற்படலாம். இதைச் சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும். ரோமத்தின் அடி வேரை அழித்து, மேலும் வளராமல் தடுக்க முடியும். இதை எலக்ட்ரோலிஸிஸ் என்பார்கள்.



--------------------------------------------------------------------------------

விபத்தில் அடிபடும்போது, தலை தப்பினால் கூட, சில சமயம் கண்கள் அடிபட்டு, கண் உள்ளே போய்விடும்போது என்ன செய்வது?

அந்த இடத்தில் எலும்பு ஆதரவாக (சப்போர்ட்) இல்லாததால்தான் கண் உள்ளே போய்விடுகிறது. இதை எலும்பு கிராஃப்ட்டிங் செய்து, கண்ணைப் பழைய இடத்தில் வைத்து, அந்தக் குறையைச் சரிசெய்ய முடியும். அதற்குப் பிறகு கருவிழி இயல்பாக நகரும்.



--------------------------------------------------------------------------------

விபத்தில் பாதிக்கப்படாமலே சிலர் இரட்டைப் பார்வை தெரிகிறது என்கிறார்களே?

இரட்டைப் பார்வை தெரிந்தால், பரிசோதித் துப் பார்க்க வேண்டும். கண் நரம்பு பாதிக்கப் பட்டிருந்தால் இரட்டைப் பார்வைக் கோளாறு வரும். அது மட்டுமல்ல, மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று காண்பிக்கும் முக்கிய அறிகுறி அந்தப் பரிசோதனைதான். வெளியே பார்க்க கண்கள் எப்படி உவுகின்றனவோ, அதே போல், ரத்தக் குழாய்கள், நரம்பு எல்லாவற்றையும் கண்களின் வழியே கண் மருத்துவர் பார்த்துப் பரிசோதிக்க முடியும்.



--------------------------------------------------------------------------------

சிலருக்கு விழிகள் பெரிதாகி வெளியே தெரியும். இதற்குச் சிகிச்சை இருக்கிறதா?

இது தைராய்ட் பிரச்னை காரணமாக ஏற்படலாம். அறுவைச் சிகிச்சை மூலம் கண்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.

சிலர் இமையில் கான்சர் வந்து அவதிப்படுவார்கள். அதையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி, கிராஃப்டிங் மூலம் புதிய இமையை உருவாக்கி அமைத்து விடலாம். சிலருக்குப் பக்கவாதம் வந்து கண் இமையே மூட முடியாமல் இருக்கும். இதையும் அறுவைச் சிகிச்சை மூலம் குணமாக்க முடியும்.



--------------------------------------------------------------------------------
மற்றவர்களுக்குக் கண் சிகிச்சைக்காகக் கொடுத்த மருந்தை நாமும் உபயோகிக்கலாமா?

கூடாது. அது மட்டு மல்ல. திறந்த மருந்து பாட்டிலை, ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்திருந்து ஒரு மாதக் காலத்திற்குள் உபயோகிக்க வேண்டும்.



--------------------------------------------------------------------------------

மாலைக் கண் நோய் வர என்ன காரணம்?

நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, வைட்டமின் ஏ குறைபாடு. இன்னொன்று, பரம்பரையாகவே குடும்பத்தில் இருந்து வருவது. இதை ரெடினைடிஸ் பிக்மென்டோசா என்பார்கள். இவர்கள் கிட்டத்து உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஜெனடிக் கவுன்சலிங் இவர்களுக்குப் பயனளிக்கும்.



--------------------------------------------------------------------------------

கண் டாக்டரிடம் போனாலே, சொட்டு மருந்து விட்டு டைலேட் பண்ணுகிறார்களே?

ஆப்டிக் நெர்வ் எனப்படும் கண் நரம்பு எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் டைலேட் செய்யப்படுகிறது.

கண்ணாடி பவர் செக் பண்ணும்போது டைலேட் பண்ண அவசியம் இல்லை.

சொட்டு மருந்து விட்டால் கண் பாப்பா டைலேட் ஆகி விரிந்து, பின்னால் இருக்கிற விழித்திரை நன்றாகத் தெரியும். அதற்காகத்தான் பரிசோதிக்கும்போது டைலேட் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.



--------------------------------------------------------------------------------

மெட்ராஸ் ஐ வந்தால் அடுத்தவரை விரைவில் தொற்றிக்கொள்ளுமா?

மெட்ராஸ்-ஐ வந்து பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட எந்தப் பொருளைத் தொட்டாலும், நமக்கும் அந்தப் பாதிப்பு வரும். அதனால்தான் கறுப்புக் கண்ணாடி அணிவது இருதரப்பினருக்குமே பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்படுகிறது.



--------------------------------------------------------------------------------

வயதானவர் சிலர் கறுப்புப் புள்ளி தெரிகிறது என்கிறார்களே?

இதை போஸ்டீரியர் விட்ரியஸ் டிடாச்மென்ட் என்பார்கள். விட்ரியஸ் திரவம் நம் கண்களில் இருப்பது, பார்வை துல்லியமாகத் தெரிய உதவுகிறது. வயதானால் அது பழுதடைந்து போய் கரும்புள்ளி தெரியத் துவங்குகிறது. இதற்குச் சிகிச்சை கிடையாது. ரெடினாவைப் பரிசோதித்து, அது ஆரோக்யமான நிலையில் இருக்கிறதா என்று அறிவது முக்கியம்.